தமிழ்நாட்டின் முதல்வராக, நடிகர் விஜய் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் அவரை ஆந்திர மாநிலத் துணை முதலமைச்சரும், ஜன சேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாணுடன் ஒப்பிட்டுப் பேசும் போக்கு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், மங்களகிரியில் உள்ள தனது கட்சியின் தலைமையகத்தில் ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண் தன் தொண்டர்களிடையே உரையாற்றினார்.
அப்போது, “தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் வெளியாகி, விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றது முதலே, ஆந்திராவிலும் இதேபோன்றதொரு அரசியல் நகர்வைச் செய்திருக்க வேண்டும் எனப் பலரும் எனக்கு தொடர்ந்து குறுஞ்செய்திகளை அனுப்பி வற்புறுத்தி வருகின்றனர்.

அண்டை மாநிலத்தில் ஒரு நடிகர் தனிக்கட்சி தொடங்கி முதலமைச்சராகிவிட்டதால், ஆந்திராவிலும் அது சாத்தியம் என்று மக்கள் நினைக்கிறார்கள். அண்டை வீட்டுத் திருமணத்திற்குத் தேவையில்லாமல் உற்சாகமடையும் சிறு குழந்தைகளைப் போல, ஆந்திராவின் அரசியல் சூழல் முற்றிலும் மாறுபட்டது என்பதைப் புரிந்து கொள்ளாமல் பலர் பேசுகிறார்கள்.
2019-ம் ஆண்டு தேர்தலில் தான் போட்டியிட்டபோது மக்கள் நமக்கு உரிய ஆதரவை அளிக்கவில்லை. அமைச்சர்கள் கூட நமக்கு துணையாக நிற்கவில்லை. எனவே, தயவுசெய்து என்னை விஜய்யுடன் ஒப்பிட்டுப் பேசுவதை நிறுத்துங்கள்” எனக் கேட்டுக்கொண்டார்.