காலி மதுபாட்டில்களை பொதுவெளிகளில் வீசிச் செல்வதால் பெரிய அளவிலான சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு வருகின்றன. விவசாயிகள், வனவிலங்குகள், கால்நடைகள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி வருவதுடன், விளைநிலங்களும் நீர்நிலைகளும் மாசடைந்து வருகின்றன. இதனை தவிர்க்கும் விதமாக காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. டாஸ்மாக் மதுபான கடைகளில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு மது பாட்டிலிலும் வில்லை கட்டப்படுகிறது. மது வாங்கும் நபரிடம் 10 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டு, வில்லையுடன் திரும்ப ஒப்படைக்கப்படும் காலி மது பாட்டிலுக்கு 10 ரூபாய் திரும்ப வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் டாஸ்மாக் பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெற முடியாது என அதன் பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாட்டில்களை திரும்பப் பெறுவதற்கென தனியாக நபர்களை டாஸ்மாக் நிர்வாகம் நியமிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், டாஸ்மாக் நிர்வாகம் இவர்களின் கோரிக்கையை தற்போது வரை ஏற்கவில்லை. இதனைக் கண்டித்து தொடர்ந்து மூன்றாவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால், தனியார் பார்களில் மது விற்பனை அதிகரித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த மூன்று நாள்களில் சுமார் 15 கோடி ரூபாய்க்கு மது விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பணிச்சுமை குறைக்கப்படும் வரை போராட்டம் தொடரும் என பணியாளர்கள் கூறியுள்ளனர்.