வேகப்பந்து வீச்சை காத்திருந்து அடித்த ரிதிக், பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் சரமாரியாக விளாசினார். 31 பந்துகளில் 69 ரன்கள் அதில் 4 பவுண்டரிகளும் 6 சிக்ஸர்களும். ஒருபக்கம் விக்கெட்டுகள் விழுந்துகொண்டிருக்க, இன்னொரு பக்கம் ரிதிக்கின் பேட் மட்டும் “நான் இருக்கேன்!” என்று பதில் சொல்லிக்கொண்டிருந்தது.
ஆனால் 17வது ஓவரில் தீபன் லிங்கேஷ் ஒரே ஓவரில் கேப்டன் சோனு யாதவ், முகமது அத்னான் கான் என இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியை மீண்டும் கோவையின் பக்கம் திருப்பினார். ரிதிக் இருந்தாலும், மறுபக்கம் விக்கெட்டுகள் ஒன்னொன்னா விழுந்தது. கடைசி மூன்று பந்தில் நெல்லைக்கு 5 ரன்கள் தேவை. ரிதிக் களத்தில் 69 ரன்களுடன் இருந்தார். 19ஆவது ஓவரில் மூன்றாவது பந்தை அடிக்க முயன்ற ரிதிக், லோகேஷ்வரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
ரிதிக்கின் விக்கெட் விழுந்ததும் கோவை வீரர்கள் “இப்போ நம்ம நேரம்!” என்று கொண்டாடத் தயாரானார்கள். ஆனால் சச்சின் ரதி நான்காவது பந்தில் பவுண்டரி அடித்து அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார்.. 19.5 ஓவரில் 163/8. என நெல்லை இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இப்போட்டியில் 31 பந்துகளில் 69 ரன்கள் விளாசி நெல்லையின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ரிதிக் ஈஸ்வரன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
அடுத்த போட்டி…
ஷ்யாம் சுந்தரின் சதத்தால் பிரம்மாண்ட ஸ்கோரை எட்டிய திருச்சி
இரண்டாவது போட்டியில் திருச்சி முதலில் பேட்டிங் செய்தது. கே.ராஜ்குமார் 33 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து நல்ல அடித்தளம் அமைக்க, ஜெகதீசன் கௌசிக் வந்த வேகத்தில் 10 பந்துகளில் 20 ரன்கள் விளாசினார். நான்கு பவுண்டரிகள் அடித்த கௌசிக், “நான் வந்த வேலை முடிஞ்சது” என்பதுபோல வேகமாக வெளியேறிவிட்டார்.
ஆனால் மறுபக்கம் ஷ்யாம் சுந்தர் பந்து எங்கே கிடைத்தாலும் அதை எல்லைக்கோட்டை நோக்கி அனுப்பிய அவர், 57 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 8 பவுண்டரிகளும் 7 சிக்ஸர்களும் அடங்கிய அந்த இன்னிங்ஸ், 182-க்கும் மேல் ஸ்டிரைக் ரேட்டில் வந்தது. சதம் அடித்ததோடு நின்றுவிடாமல், கடைசி வரை நின்று அணியை 196 ரன்களுக்கு அழைத்துச் சென்றதுதான் அவரது இன்னிங்ஸின் சிறப்பு.
திருப்பூர் பக்கம் டி. நடராஜன் இரண்டு விக்கெட்டுகளை எடுத்தாலும், ஷ்யாம் சுந்தரை மட்டும் கட்டுப்படுத்த முடியவில்லை. இறுதியில் திருச்சி 20 ஓவர்களில் 196/6 என பெரிய ஸ்கோரை எட்டியது.