Transgender Vinothini who once begged for alms, has achieved success today as a government bus conductor – ’அன்று யாசகம் கேட்டவர், இன்று அரசுப் பேருந்து நடத்துநர்’ – சாதித்த திருநங்கை விநோதினி!

Spread the love

கோவை தெலுங்குப்பாளையத்தைச் சேர்ந்தவர் திருநங்கை வினோதினி. பழனியைச் சொந்த ஊராகக் கொண்ட இவருக்கு, 10ஆம் வகுப்பில் நடத்துனராக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. பின்னர் பாலின மாறுபாடு காரணமாக படிப்பை கைவிட்டவர், பழனியில் திருநங்கைகளோடு பயணித்தார். நீண்ட காலத்திற்கு பிறகு 2018-ல் தன்னை ஒரு திருநங்கையாக மாற்றிக்கொண்டவர்  பின் கோவை வந்தார்.

தொடக்கத்தில் வீட்டு வேலைகள், சமையல் வேலைகள், கார் டாக்ஸி ஓட்டுநர் என சிறு சிறு வேலைகள் பார்த்த வினோதினி, கொரோனா காலகட்டத்துல யாசகம் கேட்கிற நிலைமைக்குத் தள்ளப்பட்டார். அதனை தொடர்ந்து செய்ய விரும்பாத விநோதினி, மனம் தளராமல் உழைத்து தற்போது தற்காலிக அரசுப் பேருந்து நடத்துநராக பணியில் சேர்ந்துள்ளார்.

இது குறித்து விநோதினி கூறியதாவது, ”நடத்துநர் ஆகனும்ங்குற முயற்சில ஈடுபட்டபோது எத்தனையோ பேர் எளக்காறமா பார்த்தாங்க, நீயெல்லாம் இங்க வந்து என்ன பண்ண போறனு நெறைய வசைச்சொற்கள வீசுனாங்க. நடத்துனர் வேலை வாங்கியே ஆகனும்னு ஐந்து , ஆறு முறை கோவை மாவட்ட ஆட்சியர் கிட்ட கடிதம் கூட கொடுத்தேன். ஆனா ஒரு பதிலும் வரல…

இது மாதிரி எத்தனை தடைகள் வந்தாலும், அத தாண்டி வரனும்னு தான் நெனச்சேன். கோவை மாவட்ட டி.என்.எஸ்.டி.சி. எம்டி-யாக இருந்த முகமது நசார் சார் தான் என்னோடே இந்த வேலைக்காக மேல் இடத்துல பேசுனாரு. இரண்டு வருஷமா பிறகு இந்த வருஷத்துல தான் எனக்கு வேலை கெடைச்சிருக்கு.

வேலைக்கு வந்த பிறகு நெறைய பேர் வாழ்த்துனாங்க, சிலர் ஆச்சர்யமா பார்த்தாங்க, என்னோட சக ஊழியர்களும் சரிசமமா நடத்துறாங்க. திருநங்கைகள்னா பாலியில் தொழில் தான் பண்ணனும், யாசகம் மட்டும் தான் கேட்கனும் அப்படிங்கிற நிலைமை மாறி எங்களையும் சக மனிதர்களாக பார்க்கனும். நாங்க வேலைகள் செய்ய தயாரா இருக்கிறோம், அரசாங்கமும் எங்களை மதிச்சு எங்களோட தகுதிக்கு ஏற்ப வேலை வாய்ப்புகளை அதிகரித்துக் கொடுத்தால் ஒரு அங்கீகாரம் கிடைக்கும்” என்றார்.

வினோதினியின் வெற்றி பல திருநங்கைகளின் நம்பிக்கையாக உருவெடுத்துள்ளது.!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *