TVK: "அனுபவமற்றவரிடம் நம் குறைகளை எப்படிச் சொல்வது?" – அமைச்சர் ராஜ்மோகன் குறித்து விஷால் கேள்வி

Spread the love

முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றபோதே, அவருடன் 9 சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர்.

பதவியேற்று ஒரு வாரத்திற்குப் பிறகும் அவர்களுக்கான இலாகா ஒதுக்கீடு செய்யப்படவில்லை என விமர்சனங்களும் எழுந்தன. நேற்றைய தினம் அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிப்பும் வெளியானது.

விஜய் - ராஜ்மோகன்
விஜய் – ராஜ்மோகன்

அதில் அமைச்சர் ராஜ்மோகனுக்கு பள்ளிக்கல்வித்துறை, தமிழ் வளர்ச்சித்துறை, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை, தொல்லியல் துறை, திரைப்பட தொழில்நுட்பம் மற்றும் திரைப்பட சட்டத்துறை ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

இந்நிலையில், நடிகர் விஷால் சினிமா துறை பற்றிய அனுபவம் இல்லாத அமைச்சரிடம் எப்படி எங்களுடைய கோரிக்கைகளை முன்வைப்பது எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இது தொடர்பாக விஷால் அவருடைய எக்ஸ் பக்கத்தில், “தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தகுந்த அமைச்சரவைகளை முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஒதுக்கியிருப்பதைப் பார்ப்பதில் மகிழ்ச்சி.

அதே நேரத்தில், திரைப்படத் தொழில்நுட்பம் மற்றும் திரைப்பட சட்டத்துறை அமைச்சராக ராஜ்மோகன் பொறுப்பேற்றிருப்பது சற்றே மனவருத்தத்தை அளிக்கிறது.

தற்போது கடுமையான நஷ்டத்தைச் சந்தித்துக்கொண்டிருக்கும் நமது சினிமா திரையுலகின் கோரிக்கைகளையும், குறைகளையும் ஒரு சங்கமாகவோ அல்லது அமைப்பாகவோ நாம் அவரிடம் எப்படி எடுத்துச் சொல்வது?

விஜய் - விஷால்
விஜய் – விஷால்

நம் திரையுலகின் கோரிக்கைகளையும் குறைகளையும், இந்தத் துறையில் என்ன நடக்கிறது என்பது குறித்துக் குறைந்த அனுபவமே உள்ள அல்லது அனுபவமே இல்லாத ஒருவரிடம், நான் அல்லது நாங்கள் ஒரு சங்கமாக எப்படிக் கோரிக்கைகளை முன்வைப்பது?

30 ஆண்டுகளாக இந்தத் துறையில் இருக்கும் நம் முதலமைச்சரை விடத் திரையுலகை யார் அதிகமாக அறிவார்கள்? அனுபவமற்றவரிடம் நம் குறைகளை எப்படிச் சொல்வது?

அன்பான முதலமைச்சர் அவர்களே, தயவுசெய்து பின்வரும் எங்களின் கோரிக்கைகளைப் பரிசீலிக்கவும். அரசின் அதிகாரப்பூர்வ டிக்கெட் முன்பதிவு தளத்தைத் தயவுசெய்து அறிமுகப்படுத்துங்கள்.

இது அரசுக்கு நல்ல வருவாயைக் கொண்டு சேர்ப்பதோடு, ஒரு டிக்கெட்டிற்கு 30 ரூபாய் வரை கூடுதல் கட்டணம் செலுத்தும் பார்வையாளர்களுக்கும் பெரிய நிம்மதியாக இருக்கும்.

‘ஒரே இந்தியா, ஒரே வரி’ என்ற விதிக்கு மாறாக, இரண்டு வரிகளை விதிக்கும் ஒரே மாநிலமாக நாம் மட்டுமே இருக்கிறோம். எனவே, இந்த உள்ளாட்சி வரியைத் தயவுசெய்து ரத்து செய்ய வேண்டும்.

ராஜ்மோகன்
ராஜ்மோகன்

தற்போது சிறு பட்ஜெட் படங்களுக்கு வழங்கப்படும் மிகக் குறைவான மானியத் தொகையை, ஒவ்வொரு ஆண்டும் கணிசமாக உயர்த்த வேண்டும். இந்தக் கோரிக்கைகளை நாம் முதலமைச்சரிடம் ஒரு மனுவாகவே வழங்கலாம் என்பது எனக்குத் தெரியும்.

ஆனால், இவை கடந்த 9 ஆண்டுகளாகத் தொடர்ந்து கோரப்பட்டு வரும் கோரிக்கைகளாகும். அமைச்சர் ராஜ்மோகன் அவர்களை நான் எந்தக் குறைவும் கூறவில்லை.

இது முற்றிலும் என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டுமே. நமது முதலமைச்சர் அவர்களால் மட்டுமே நமக்குத் தேவையான மிக முக்கியமான நிவாரணங்களை வழங்க முடியும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *