கோவை மாவட்டத்தின் மிகப்பெரிய தொகுதியான கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 4 லட்சத்து 22 ஆயிரத்து 138 வாக்காளர்கள் உள்ள நிலையில், தேர்தலில் 3 லட்சத்து 60 ஆயிரத்து 957 பேர் வாக்களித்தனர்.
இதில் 1 லட்சத்து 46 ஆயிரத்து 466 வாக்குகளைப் பெற்ற த.வெ.க. வேட்பாளர் கனிமொழி சந்தோஷ் 42 ஆயிரத்து 140 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.
1 லட்சத்து 4 ஆயிரத்து 326 வாக்குகளைப் பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் பி.ஆர்.ஜி. அருண்குமார் இரண்டாம் இடத்தையும், 90 ஆயிரத்து 726 வாக்குகளை பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் சூர்யபிரகாஷ் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.
இதற்கு முன்பாக இந்தத் தொகுதியில் நடைபெற்ற 3 தேர்தல்களிலும் அ.தி.மு.க-வே வெற்றி பெற்றிருந்தது. அ.தி.மு.க. பலம் வாய்ந்த தொகுதியாகக் கருதப்படும் இந்தத் தொகுதியில், அக்கட்சியின் கோவை வடக்கு மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர்.ஜி. அருண்குமார் முதல் முறையாகத் தோல்வியடைந்துள்ளார்.
முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்ட 37 வயதான கனிமொழி சந்தோஷ், சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வாகியுள்ளார்.

கோவை நரசிம்மநாய்க்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த இவர், இளங்கலை சட்டப்படிப்பு படித்துள்ளார். மேலும், ஜோதிடத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். டைல்ஸ் மற்றும் கிரானைட் தொழில் செய்து வரும் இவர், ஜோதிடர், பிசியோதெரபிஸ்ட், வாஸ்து நிபுணர் எனப் பன்முகங்களை கனிமொழி சந்தோஷ் கொண்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களிலும் பிரபலமாக இருந்து வரும் இவருக்கு, இன்ஸ்டாவில் லட்சக்கணக்கான பலோவர்கள் இருக்கிறார்கள். ஜோதிடம் மூலம் கேன்சரைக் குணப்படுத்தலாம் என ஒரு வீடியோவில் கனிமொழி சந்தோஷ் பேசி சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.