அமாவாசை என்றாலே புனிதமான தினம். நம் முன்னோர்களை நினைக்கும் தினம். இந்த நாளில் தவறாமல் முன்னோரை வழிபட்டுவந்தால் வாழ்வில் துன்பங்கள் விலகும் என்பார்கள். ஆனால் எல்லோராலும் அனைத்து அமாவாசையிலும் முன்னோர் வழிபாடு செய்ய முடிவதில்லை.
அப்படிப்பட்டவர்கள் தவறாமல் மூன்று அமாவாசைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பார்கள். அவை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை. இவற்றில் தமிழ் ஆண்டில் முதலில் வருவது ஆடி அமாவாசை.
தட்சிணாயின புண்ணிய காலத்தின் தொடக்கத்தில் வரும் இந்த அமாவாசை மிகவும் சிறப்பானது. புதுர் லோகத்தில் இருக்கும் நம் முன்னோர்கள் இந்த நாளில் பூமியை நோக்கிய தங்கள் பயணத்தைத் தொடங்குவார்கள் என்பது ஐதிகம்.
(புரட்டாசி அமாவாசையை ஒட்டிய பதினைந்து நாள்கள் இங்கே தங்குவார்கள் என்றும் தை அமாவாசைகாலத்தில் மீண்டும் பிதுர் லோகம் சென்று சேர்வார்கள் என்றும் சொல்லப்படுகிறது) எனவே இந்த நாளில் முன்னோர்களை நினைத்தாலே நமக்குப் புண்ணிய பலம் சேரும்.

பலருக்கும் சுபகாரியத் தடைகள், முன்னேற்றம் இன்மை, தொழில் வியாபார விருத்தியின்மை, குடும்பத்தில் அமைதியின்மை ஆகிய சிக்கல்களுக்குக் காரணம் பித்ரு தோஷமே என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
நமக்கு உயிரையும் உடலையும் தந்த பெற்றோர்களை அவர்கள் வாழும்போது உரிய மரியாதையோடு நடத்தி அவர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்ய வேண்டியது ஒவ்வொரு பிள்ளையின் கடமை.
அவர்கள் மறைந்த பிறகு அவர்களுக்கு உரிய ஆராதனைகள் செய்து வழிபட வேண்டியதும் அவசியம். இவற்றைச் செய்யாமல் விட்டுவிடும்போது முன்னோர்களின் வருத்தத்துக்கு ஆளாவோம். அவர்களின் மனக்குறையே பித்ரு தோஷமாக நம்மைப் பீடிக்கும்.
ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன், ராகு – கேதுக்களோடு எந்த ஸ்தானத்தில் சேர்ந்திருந்தாலும் அது பித்ரு தோஷத்தைக் குறிக்கும். இப்படிப்பட்ட ஜாதகக்காரர்கள் பித்ரு வழிபாட்டை மிகுந்த கவனத்துடன் செய்துவருவது அவசியம். அவர்கள் மட்டுமல்ல தந்தையை இழந்த அனைவரும் அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்து வழிபாடு செய்வது அவசியம்.