சூலூர் சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 3 லட்சத்து 7 ஆயிரத்து 616 வாக்காளர்கள் உள்ள நிலையில், 2 லட்சத்து 71 ஆயிரத்து 567 பேர் வாக்களித்தனர்.
இதில் 90 ஆயிரத்து 531 வாக்குகள் பெற்ற த.வெ.க. வேட்பாளர் சுகுமார் 4,790 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 85,741 வாக்குகள் பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் கந்தசாமி இரண்டாம் இடத்தையும், 83,654 வாக்குகள் பெற்ற தி.மு.க. வேட்பாளர் தளபதி முருகேசன் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.
இந்தத் தொகுதியில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் அ.தி.மு.க, காங்கிரஸ் தலா 2 முறையும், தே.மு.தி.க. ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. அ.தி.மு.க. பலம் வாய்ந்த தொகுதிகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்தத் தொகுதியில், முதல் முறையாகப் போட்டியிட்ட த.வெ.க. வேட்பாளர் சுகுமார் வெற்றி பெற்றுள்ளார்.
கோவை வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த சுகுமார் (56), ஐடிஐ படித்துள்ளார். இவர் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களைச் செய்து வருகிறார். அ.தி.மு.க-வில் இருந்த இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக தி.மு.க-வில் இணைந்தார்.
பின்னர் நகர்ப்புற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. சார்பில் வெள்ளலூர் பேரூராட்சியில் கவுன்சிலராகப் போட்டியிட வாய்ப்பு கேட்டார். வாய்ப்பு மறுக்கப்பட்டதால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, தி.மு.க-வில் இருந்து விலகி த.வெ.க-வில் இணைந்தார். முதல் முறையாகத் தேர்தலில் களம் கண்ட சுகுமார் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வாகியுள்ளார்.