TVK: விஜய் சொத்து மதிப்பு; `புகார் மனுவைத் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம்!' – காரணம் என்ன?

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் சி. ஜோசப் விஜய் தாக்கல் செய்த தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் உள்ள நிதி விவரங்கள் குறித்து விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மூன்று முக்கிய மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

பெரம்பூர் தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் எம். பி. வெங்கடேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “தேர்தல் பிரமாணப் பத்திரங்கள் வெறும் சம்பிரதாயங்கள் அல்ல என்றும், அதில் உண்மைகளை மறைப்பது தேர்தல் நடைமுறையையே திசைதிருப்பும் செயலாக அமையும். விஜய்யின் பிரமாணப் பத்திரத்தில் பல்வேறு முரண்பாடுகள் இருக்கிறது. தனது மனைவி சங்கீதாவிற்கு ரூ.12.60 கோடி கடன் வழங்கியதாக விஜய் குறிப்பிட்டுள்ளார்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

இந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதியன்று சங்கீதா விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்ததாகக் கூறப்படும் நிலையில், தம்பதியினருக்கு இடையே திருமண வாழ்க்கை தொடர்பான பிரச்னை நிலவிவரும் சூழலில், இந்த நிதிப் பரிமாற்றத்தின் உண்மைத்தன்மை மற்றும் நோக்கம் ஆகியவை குறித்துச் சந்தேகம் எழுகிறது. தனியார் கல்வி அறக்கட்டளையான ‘கோகிலாம்பாள் கல்வி அறக்கட்டளை’ என்ற அமைப்புக்கு ரூ. 20 கோடி வழங்கப்பட்டதாக விஜய் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிதிப் பரிமாற்றத்திற்கு முறையான விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை. தனக்கு எவ்விதக் கடன்களும் (liabilities) இல்லை என்று அறிவித்துவிட்டு, அதே வேளையில் பெரிய தொகையை கடனாக வழங்கியதாகக் கூறுவது போன்ற முரண்பாடான தகவல்கள் இடம்பெற்றுள்ளது. இத்தகைய முரண்பாடுகள் ஒரு தொடர் நிகழ்வாகவே காணப்படுகிறது.” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு முன்பு வி. விக்னேஷ் என்பவர், “விஜய் இரண்டு தொகுதிகளில் (பெரம்பூர் மற்றும் திருச்சி-கிழக்கு) போட்டியிடுவதற்காக மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த இரண்டு இடங்களிலும் அவர் கொடுத்த சொத்து விவரப் பட்டியலில் (Affidavit) சுமார் ரூ.100 கோடி வித்தியாசம் இருக்கிறது. ஒரே நபருக்கு, ஒரே நேரத்தில், இரண்டு இடங்களில் எப்படி வெவ்வேறு சொத்து மதிப்பு இருக்க முடியும்? இந்த முரண்பாடு ஏதோ தெரியாமல் நடந்த தவறு அல்ல.

தவெக விஜய்
தவெக விஜய்

முக்கியமான பணப் பரிமாற்றங்களையும், சொத்து விவரங்களையும் விஜய் வேண்டுமென்றே மறைத்திருக்கிறார். சொத்து விவரங்களில் இவ்வளவு பெரிய முரண்பாடு (Material Discrepancy) இருப்பதால், இதன் பின்னணியில் உள்ள உண்மை என்ன என்பதைக் கண்டறிய வருமான வரித்துறை தலையிட்டு விரிவான விசாரணை நடத்த வேண்டும்.” என அந்த மனுவில் கோரியிருந்தார். கோரிக்கை.

இதேபோல், அ.தி.மு.க வேட்பாளர்கள் டி. ஜெயக்குமார் மற்றும் சி. வி. சண்முகம் ஆகியோரும் விஜய்யின் சொத்து விவரங்கள் குறித்து விசாரணை கோரி தனித்தனியாக ரிட் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில், எம். பி. வெங்கடேஷ் தாக்கல் செய்த மனுவை தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அமர்வு தள்ளுபடி செய்திருக்கிறது. இதே விவகாரம் தொடர்பாக வி. விக்னேஷ் ஏற்கனவே மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றம்

அதைத் தொடர்ந்து நீதிபதிகள், “ஏற்கெனவே இதேப்போன்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் விக்னேஷ் என்பவர் மனுதாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவை ஏற்ற நீதிமன்றம், இது தொடர்பாக வருமான வரித்துறை மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்திற்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஒரு குறிப்பிட்ட விவகாரத்தில் ஏற்கனவே நீதிமன்றம் ஒரு முடிவை எடுத்து விசாரணை நடத்தி வரும் நிலையில், மீண்டும் அதே போன்ற புதிய மனுக்களை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை.” எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்கள் குறித்த விரிவான காரணங்களுடன் கூடிய நீதிமன்ற உத்தரவு நாளை (இன்று 28.4) மாலை வெளியாகும்.” எனத் தெரிவித்திருக்கின்றனர்.

விஜய்யின் சொத்து முரண்பாடுகள் தொடர்பான விக்னேஷின் மனு மீதான அடுத்தகட்ட விசாரணை வரும் ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *