கோவை வடக்கு தொகுதியில் 2 லட்சத்து 96 ஆயிரத்து 939 மொத்த வாக்காளர்களில், 2 லட்சத்து 24 ஆயிரத்து 222 பேர் வாக்களித்தனர். இதில் த.வெ.க. வேட்பாளர் சம்பத் குமார் 92 ஆயிரத்து 500 வாக்குகள் பெற்று 21 ஆயிரத்து 992 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
70 ஆயிரத்து 506 வாக்குகள் பெற்ற தி.மு.க. வேட்பாளர் துரை செந்தமிழ் செல்வன் இரண்டாம் இடத்தையும், 49 ஆயிரத்து 722 வாக்குகள் பெற்ற பா.ஜ.க. வேட்பாளர் வானதி சீனிவாசன் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.
கோவை வடக்கு தொகுதியில் இதற்கு முன்பாக நடைபெற்ற 3 தேர்தல்களிலும், அ.தி.மு.க-வே வெற்றி பெற்றிருந்த நிலையில், முதல் முறையாக த.வெ.க. வெற்றி பெற்றுள்ளது.
யார் இந்த சம்பத் குமார்?
கோவை கணபதி பகுதியை சேர்ந்த சம்பத் குமார் (47), எம்.பி.ஏ. பட்டதாரி. இவர் அப்பகுதியில் நெய் வியாபாரம் செய்து வருகிறார். விஜய் ரசிகர் மன்றம், விஜய் மக்கள் இயக்கம் ஆகியவற்றில் பொறுப்பில் இருந்த இவர், த.வெ.க-வில் கோவை மாநகர மாவட்டச் செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
தமிழ்நாட்டில் முதல் முறையாக நடந்த த.வெ.க-வின் மேற்கு மண்டல பூத் முகவர் கூட்டம் கோவையில் வெற்றிகரமாக நடக்க காரணமாக இருந்தவர்களில் இவரும் ஒருவர். தொடர்ந்து கட்சி பணிகளில் ஈடுபட்டு வந்த இவர், முதல் முறையாக தேர்தல் களம் கண்டார். கோவை பா.ஜ.க-வின் முகமாக கருதப்படும் வானதி சீனிவாசன், தி.மு.க. மாநகர மாவட்டச் செயலாளர் துரை செந்தமிழ் செல்வன் ஆகிய பலம் வாய்ந்த வேட்பாளர்களை வீழ்த்தி, சம்பத் குமார் சட்டமன்றத்திற்கு தேர்வாகியுள்ளார்.