சிவசேனா(உத்தவ்) கட்சி சார்பாக ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் உத்தவ் தாக்கரே கலந்து கொண்டு பேசுகையில், ”எனது தந்தை ஆரம்பித்த சிவசேனாவை விட நான் ஒன்றும் பெரிதல்ல. எனக்குத் தலைமைப் பதவியின் மீது எந்த ஆசையும் இல்லை. என் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டால், சிவசேனா தலைவர் பதவியிலிருந்து விலகவும் நான் தயார். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை என்னவென்றால், இந்த உன்னதமான சிவசேனாவை கொள்ளையர்களிடமோ அல்லது துரோகிகளிடமோ ஒப்படைக்கக் கூடாது.
மற்றபடி, நான் எதைக் கண்டும் கலங்கவோ அல்லது சோர்ந்து போகவோ மாட்டேன். ஒரு மலையைப் போல உறுதியாக நின்று எனது கடமைகளை நிறைவேற்றுவேன்,” என்று அவர் கூறினார்.
சிவசேனா (உத்தவ்) கட்சியானது காங்கிரஸுடன் இணைந்துவிடும் என்று அதிருப்தி எம்.பி.க்கள் கொண்டிருந்த அச்சத்திற்குத் உத்தவ் தாக்கரே பதில் கொடுத்திருந்தார்.
“நாங்கள் 30 ஆண்டுகளாக பாஜகவுடன் கூட்டணியில் இருந்தபோதே அவர்களுடன் இணையாத நிலையில், இப்போது காங்கிரஸுடன் எப்படி இணைவோம்? எனவே, இவ்வாறு கூறுபவர்கள் பொய் சொல்கிறார்கள்.

ஷிண்டேவின் சிவசேனா கட்சியுடன் பாஜக இணையக்கூடிய சூழல் தற்போது உருவாகியுள்ளது. சிவசேனா பிறந்தது மற்ற கட்சிகளுடன் இணைவதற்காக அல்ல. மாறாக, மராத்தி மக்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பிற்காகவும், இந்துத்துவாவிற்காகவும் அது உருவானது. காங்கிரஸும் எங்களை ஒடுக்கியுள்ளது. எங்கள் வாழ்நாளில் பாதிக்கும் மேற்பட்ட காலம் காங்கிரஸுடனான பகையிலேயே கழிந்துள்ளது. எங்களுக்கு அவர்களுடன் கடும் பகை இருந்தது.
நாங்கள் நம்பிக்கையை இழந்துவிடுவோம் என்று சிலர் நினைக்கலாம்; ஆனால் நாங்கள் ஒருபோதும் அப்படிச் செய்யமாட்டோம். சிலர் எங்களுக்கு உத்தரவிடுமாறு கூறுகிறார்கள். ஆனால் பாலாசாகேப் ஏற்கனவே அதற்கான உத்தரவை (எங்களுக்குத் துரோகம் இழைப்பவர்களைப் புதைத்துவிடுங்கள் என்று) பிறப்பித்துவிட்டார். தேர்தல் முடிவுகளைக் கொண்டு மட்டுமே எங்கள் வெற்றியை மதிப்பிடக்கூடாது. வாக்காளர்கள் எங்களுக்கு வாக்களித்திருந்தும் எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகிச் சென்றுவிட்டதால், இன்று நான் அவர்களிடம் மன்னிப்பு கோருகிறேன்,” என்று அவர் கூறினார்.