அசாம் மாநிலத்தின் தேஸ்பூரில் பிறந்த கயாடு லோஹர், புனேவில் வளர்ந்தவர். வணிகவியல் பட்டப்படிப்பை முடித்துள்ள அவர், சினிமாவுக்கு வருவதற்கு முன்பு பல்வேறு நிறுவனங்களிலும், சில்லறை விற்பனைத் துறையிலும் பணியாற்றியதாக சமீபத்திய பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.
கயாடு லோஹர் முதலில் மாடலிங் துறையின் மூலம் கவனம் பெற்றவர். ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா எவர்யுத் ஃபிரெஷ் ஃபேஸ்’ போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் திரைத்துறைக்குள் நுழைந்தார். பின்னர் 2021ஆம் ஆண்டு வெளியான கன்னட திரைப்படமான முகில்பேட்டே படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து மலையாளத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டு, தெலுங்கில் அல்லூரி, மராத்தியில் ஐ பிரேம் யூ உள்ளிட்ட படங்களில் நடித்த அவர், பல மொழித் திரைப்படங்களில் தொடர்ந்து வாய்ப்புகளைப் பெற்றார்.
தமிழ் ரசிகர்களிடையே அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த படம் டிராகன். அந்தப் படத்தின் வெற்றி கயாடு லோஹரை தமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க இளம் நடிகைகளில் ஒருவராக மாற்றியது.
தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல புதிய படங்களில் நடித்து வரும் கயாடு லோஹர், தென்னிந்திய திரையுலகின் எதிர்கால நட்சத்திரங்களில் ஒருவராக பார்க்கப்படுகிறார்.
இந்த நிலையில் அவர் சமூக ஊடகங்களில் இருந்து ஓய்வு எடுப்பதாக அறிவித்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள கயாடு லோஹர், “மன அமைதிக்காகவும், தனிப்பட்ட வாழ்க்கையை ரசிக்கவும் சமூக ஊடகங்களில் இருந்து தற்காலிகமாக விலகுகிறேன். இதுவரை எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/DZy-3Ezo1wt/
மேலும், தாம் சமூக ஊடகங்களில் இல்லாத காலத்தில் முக்கிய அறிவிப்புகள் மற்றும் தொழில்முறை தொடர்பான தகவல்களை தனது குழுவினர் அதிகாரப்பூர்வ பக்கங்கள் மூலம் பகிர்வார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வந்த அவர் திடீரென ஓய்வு எடுப்பதாக அறிவித்திருப்பது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், அவரது தனிப்பட்ட முடிவுக்கு ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து, விரைவில் மீண்டும் சமூக ஊடகங்களில் திரும்ப வர வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர்.



