இந்நிலையில் முதல் இரண்டு முயற்சிகளிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெறுவது எப்படி? என்பது குறித்து நம்மிடம் பேசிய ஆதில் பெய்க், “7 முதல் 8 சதவிகித மாணவர்கள்தான் முதல் முயற்சிலேயே தேர்வில் தேர்ச்சி பெறுகிறார்கள்.
அதேபோல 10 லிருந்து 15 மாணவர்கள்தான் இரண்டாவது முயற்சியில் தேர்ச்சி பெறுகிறார்கள். மூன்றாவது மற்றும் நான்காவது முயற்சியில் கிட்டத்தட்ட 25 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெறுகிறார்கள்.
பொதுவாக மாணவர்கள் 1 வருடம் UPSC தேர்வுக்கு நன்றாக தயாராகி தேர்வு எழுதுவார்கள். ஆனால் சில நேரங்களில் தேர்ச்சி பெறாமல் போய்விடுவார்கள். எவ்வளவு நன்றாக படித்திருந்தாலும் நிறைய போட்டியாளர்கள் இருப்பதால் முதல் முயற்சியில் தேர்ச்சி பெறுவது கொஞ்சம் கஷ்டம்தான்.

ஆனால் நிச்சயமாக நல்ல வழிகாட்டுதல், கடின உழைப்பு மற்றும் உத்தியோடு செயல்பட்டால் இரண்டாவது முயற்சியில் தேர்ச்சி பெற்றுவிடலாம். முதல் மூன்று முயற்சிகளில் தேர்ச்சி பெறுவது எப்படி என்று நினைக்காமல், முதல் இரண்டு முயற்சிகளில் எப்படி தேர்ச்சி பெறுவது என்று மாணவர்கள் சிந்திக்க வேண்டும்.
ஒரு மாணவர் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற வேண்டும் என்று நினைத்தார் என்றால், கல்லூரி படிக்கும்போதிருந்தே தயாராக வேண்டும். கல்லூரி முடித்த பிறகு ஒரு வருட பயிற்சி எடுத்துக்கொண்டு தேர்வு எழுதுகிறார்கள்.
அப்படி எழுதினால் தேர்ச்சி பெறுவது கடினம். கல்லூரி படிக்கும்போதே தயாராக வேண்டும் என்று நினைக்கும் மாணவர்கள் முதலில் பள்ளிக்கூடப் புத்தகங்களைப் படிக்க வேண்டும். இந்தத் தேர்வுகளில் வெல்வதற்கு அரசியல், வரலாறு, பொருளாதாரம், புவியியல் என 4 சப்ஜட்டுகள் தான் மிக முக்கியமானது.
கல்லூரி படிக்கும் முதல் வருடத்தில் 6 ஆம் வகுப்பில் இருந்து 12 வகுப்பு வரை உள்ள புத்தகங்களை படிக்க வேண்டும். அதன் பிறகு இரண்டாம் வருடத்தில் பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்க ஆரம்பிக்கலாம். மூன்றாவது வருடத்தில் தேர்வு எழுத முயற்சிக்கலாம். சரியான வழிகாட்டுதலும், கடின உழைப்பும் இருந்தால் நிச்சயம் தேர்ச்சி பெறலாம்” என்றார்.