முஸ்லிம்கள் தங்களது முஸ்லிம் நண்பர்களை பார்க்கும் போது அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறுவது வழக்கம். அப்படி அழைத்து பெண் போலீஸ் அதிகாரி சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார். மேற்கு வங்கத்தில் கூடுதல் போலீஸ் கண்காணிப்பாளராக இருந்தவர் புஷ்ரா பானு. முஸ்லிமான இவர் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மத்தியில் தான் இதில் எப்படி தேர்ச்சி பெற்றேன் என்பது குறித்த தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்படி பகிர்ந்து கொள்ள தொடங்கும் முன்பாக முஸ்லிம் என்ற முறையில் அஸ்ஸலாமு அலைக்கும் என்ற வார்த்தையை சொல்லி தனது அனுபவங்களை சொல்ல ஆரம்பித்தார்.
அந்த வீடியோவை சமூக ஊடகத்தில் பகிர்ந்து இருந்தார். வீடியோவின் ஆரம்பத்தில், அவர் தனது பார்வையாளர்களை பார்த்து அஸ்ஸலாம் அலைக்கும் என்று சொன்னார். பின்னர் அவர் ஐபிஎஸ்க்கான தனது பயணத்தை விவரிக்கிறார் – அவர் தேர்வுக்கு எவ்வாறு தயாரானார், அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் (ஏஎம்யு) உள்ள ரெசிடென்ஷியல் கோச்சிங் அகாடமி (ஆர்சிஏ) யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகும் போது தனக்கு எப்படி உதவியது என்று விவரித்தார்.
இதற்கு இந்து அமைப்புகள் சில எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அரசு அதிகாரியாக இருந்து கொண்டு தனது உரையில் எப்படி அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறலாம் என்று அவர்கள் மாநில உள்துறை செயலாளரிடம் புகார் செய்துள்ளனர். அவர்கள் புகார் செய்தவுடன் புஷ்ரா பானுவை மாநில அரசு அதிரடியாக இடமாற்றம் செய்துவிட்டது. பானுவை ஆயுத படைப்பிரிவுக்கு மாற்றி அதிகாரம் இல்லாமல் செய்துவிட்டனர். இது வழக்கமான இடமாறுதல்தான் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. அதுவும் பொதுமக்கள் நலன் கருதி இந்த இடமாறுதல் செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் காரக்பூரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருந்த ஐபிஎஸ் அதிகாரி புஷ்ரா பானோ, பொறுப்பேற்ற இரண்டரை மாதங்களில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2021ம் ஆண்டு யு.பி.எஸ்.சி தேர்வில் பானு வெற்றி பெற்றார். உத்தரபிரதேசத்தை சேர்ந்த பானு அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பி.எச்டி முடித்துள்ளார்.