இன்றைய இளைஞர்கள் இப்படி நினைப்பதற்கு முக்கியமான காரணம், ரியல் எஸ்டேட்டுகளின் விலை மிகவும் அதிகரித்துவிட்டதுதான். இன்றைக்கு இந்தியாவின் எந்த நகரத்தை எடுத்துக்கொண்டாலும், அடுக்குமாடிக் குடியிருப்புகளின் விலை நகர்ப்புறங்களில் மிக அதிகமாக இருக்கிறது. அதை விட சற்றுக் குறைந்த விலையில் அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டை வாங்க வேண்டும் எனில், நகர்ப்புறத்தை விட்டு வெளியே வரவேண்டியிருக்கிறது. ஆனால், நகரின் மையப்பகுதியில்தான் அலுவலகம் இருப்பதால், தினமும் கஷ்டப்பட்டுத்தான் அலுவலகத்துக்கு வந்துசெல்ல வேண்டி இருக்கிறது.
அடுக்குமாடிக் குடியிருப்புக்கே இவ்வளவு கஷ்டம் எனில், நகர்ப்புறத்தில் தனி வீடு வாங்க மிக அதிகமான பணம் செலவாகும். நகர்ப்புறத்துக்கு வெளியே வாங்க வேண்டும் எனில், செலவு கொஞ்சம் குறைந்தாலும், குழந்தைகளின் பள்ளி, கல்லூரிப் படிப்பு, அலுவலகம் என அலைய வேண்டி இருக்கிறது.
அடுத்த முக்கியமான காரணம், வங்கிக் கடன் மூலம் சொந்த வீடு வாங்கும்போது அதற்குக் கட்டவேண்டிய இ.எம்.ஐ தொகை மிகவும் அதிகமாக இருக்கிறது. இன்றைய நிலையில், மாதந்திரம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார் எனில், அதில் 60% – 70% வரை வீட்டுக்கடனுக்கான இ.எம்.ஐ தொகையைக் கட்டவே சரியாகப் போய்விடுகிறது. மீதமுள்ள 30% – 40% பணத்தை வைத்துத்தான் வீட்டுக்கான சாப்பாட்டுச் செலவு, குழந்தைகளின் பள்ளி, கல்லூரிக் கட்டணம், துணிமணிகள், மருத்துவச் செலவு என எல்லாச் செலவுகளையும் செய்ய வேண்டி இருக்கிறது.
”என் சம்பளத்தில் 60 சதவிகிதத்தை அடுத்த 20 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து திரும்பக் கட்டியாக வேண்டும் என்கிற கட்டாயம் எனக்கு வேண்டவே வேண்டாம் என்று நினைத்துத்தான் சொந்த வீடு வாங்கும் முடிவை கைவிட்டுவிட்டேன். சொந்த வீடு என்கிற ஒரே காரணத்திற்காக என் நிதிச் சுதந்திரத்தை இழக்க விரும்பவில்லை” என்கிறார் ஒரு இளைஞர்.
”நான் ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். வேலை காரணமாக நான் வேறு வேறு ஊர்களுக்கு மாறிச் செல்ல வேண்டியிருக்கும். இந்த நிலையில், ஏதோ ஒரு நகரத்தில் வீட்டை வாங்கிவிட்டால், பிற்பாடு வேறொரு ஊரில் வாடகை வீட்டில்தானே இருக்க வேண்டும்? அதற்கு சொந்த வீட்டை வாங்காமலே இருந்துவிடலாமே!” என்று கேட்கிறார் இன்னொரு இளைஞர்.