டெல்லியின் தெற்கு பகுதியில் உள்ள சங்கம் விஹாரில் வசித்து வந்தவர் முன்னாலால்(55). கடந்த 10ம் தேதி முன்னா லால் சங்கம் விஹாரின் ரதியா மார்க் பகுதியில் உள்ள சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அன்று அதிகாலை 5 மணியளவில் முன்னாலால் சாலையில் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. முன்னா உடலில் பல காயங்கள் காணப்பட்டது. அவர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவரை சோதித்து பார்த்ததில் அவர் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது. இதையடுத்து முன்னாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து முன்னாலால் மனைவி நசியாவிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அவரிடம் விசாரணை நடத்தியதில் இரவில் வீட்டில் திருடர்கள் நுழைந்து திருட முயன்றனர் என்றும், அதனை தடுக்க முயன்ற தனது கணவரை அடித்து கொன்றதாகவும் தெரிவித்தார்.
சம்பவம் நடந்தபோது தான் தூங்கிக்கொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டார். ஆனால் அவரது வாக்குமூலம் முன்னுக்குபின் முரணாக இருந்தது. இதையடுத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில், முன்னாவின் மனைவியும், அவரது காதலனும் சேர்ந்து இக்கொலையை செய்து இருப்பது தெரிய வந்தது.
இது குறித்து துணை போலீஸ் கமிஷனர் மித்தல் கூறுகையில், “நாங்கள் நசியாவிடம் மேலும் தீவிர விசாரணை நடத்தியதில் முழு குற்றத்தையும் ஒப்புக்கொண்டார். அவர் தனது கணவரை தனது காதலர் சமன் மற்றும் அவரது கூட்டாளியுடன் சேர்ந்து கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் வீட்டிற்குள் திருடர்கள் நுழைந்து திருட முயன்றதாகவும், அவர்களை தனது கணவர் எதிர்த்து போராடியபோது திருடர்கள் அவரைக் கொன்றுவிட்டனர். அந்த நேரத்தில் தான் தூங்கிக் கொண்டிருந்ததாக தெரிவித்தார்.
அவர்களது வீட்டை சோதனை செய்ததில் தரையை சுத்தம் செய்ததும், ரத்தத்தின் தடயங்களை அகற்றவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதும் தெரிய வந்தது. விசாரணையில் நசியாவும், அவர்களது வீட்டிற்கு அருகில் உள்ள கடையில் வேலை செய்யும் சமன் என்பவருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு ஏற்பட்டுள்ளது. இத்தொடர்பு திருமணம் தாண்டிய உறவாக மாறியது. எனவே சமனிடம் தனது கணவரை கொலை செய்யும்படி நசியா தெரிவித்துள்ளார். இக்கொலைக்காக ரூ.5 லட்சம் கொடுப்பதாகவும், நீண்ட கால அடிப்படையில் நிதியுதவி செய்வதாகவும் உறுதியளித்துள்ளார்.