நடிகர் லொள்ளு சபா வெங்கட் ராஜ் நேற்று உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 68. “வல்லனுக்குப் புல்லும் ஆயுதம்’, ‘மனிதன்’, ‘டிக்கிலோ’ எனப் பல படங்களிலும் நடித்திருக்கிறார்.
‘மனிதன்’ படத்தில் போலீஸ் கான்ஸ்டபிளாகக் கலகலக்க வைத்திருப்பார். சந்தானத்தின் ‘டிக்கிலோனா’ படத்தில் கம்பிக்கிடையே புகுந்து புகுந்து வந்திடுவார். ‘வடக்குப்பட்டி ராமசாமி’யில் எதிர்காற்று அடித்ததில், லேட் ஆக நடந்து வந்தேன் என்பார். இப்படி சின்னதொரு ரோலில் நடித்திருந்தாலும் காமெடியில் அதகளம் செய்திருப்பார் வெங்கட் ராஜ்.
மறைந்த நடிகர் வெங்கட் ராஜ் குறித்து ‘லொள்ளு சபா’ இயக்குநர் ராம்பாலாவிடம் பேசினோம்.
பெரிய திரையில் சந்தானத்தை வைத்து ‘தில்லுக்கு துட்டு’ மற்றும் ‘தில்லுக்கு துட்டு 2’, மிர்ச்சி சிவா நடிப்பில் ‘இடியட்’ ஆகிய படங்களை இயக்கியவர் ராம்பாலா.
”லொள்ளு சபாவில் நான் அறிமுகப்படுத்தின பலருக்கும் ஒற்றுமை இருக்கும். ஒவ்வொருத்தருமே ஒரு தனித்துவமான சாயல்ல இருப்பாங்க. வித்தியாசமான தோற்றம், உடல்வாகு, பேச்சு இப்படி எல்லாமே வித்தியாசமா இருக்கறவங்களைத்தான் ‘லொள்ளு சபா’க்குள் கொண்டு வந்திருப்பேன்.
‘லொள்ளு சபா’ புகழ் பெற ஆரம்பித்த சமயத்தில்தான் விஜய் டி.வி.யில் இருந்த நண்பர் ஒருத்தர் வெங்கட் ராஜை அழைத்து வந்தார். வெங்கட் ராஜ், அடிப்படையில் டைப் ரைட்டர் மெக்கானிக் ஆக இருந்தவர். கம்ப்யூட்டர் சென்டர்கள் வருகை அதிகரித்த காலகட்டத்துல டைப் ரைட்டர் மெக்கானிக்களுக்கு வேலை வாய்ப்புகள் குறைவாகிடுச்சு.