சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, நிர்வாக ரீதியான மாற்றங்களுக்கும், அமைப்பை முழுவதுமாக மாற்றவும் திமுக தலைமை தயாராகிக் கொண்டிருக்கிறது. இடைத்தேர்தல் முடிந்த பிறகு தேர்தல் தோல்விக் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்த தலைமை, அதன் ரிப்போர்ட்டுகளை ஆராய்ந்து, மாற்றங்களை செய்ய பெரிய பிளானையே போட்டு வருவதாகவும், இதனால் திமுக சீனியர்களிடையே பதற்றமான சூழல் நிலவுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தலைமையின் முடிவுகளில் மிக முக்கிய முடிவாக இருப்பது, கட்சியின் பொதுச் செயலாளரை மாற்ற வேண்டும் என்பது. முன்னதாக, டி.ஆர்.பாலு அல்லது ஆ.ராசா பெயர்கள் இடம்பெற்ற நிலையில், டி.ஆர் பாலுவிற்கு பதவி வழங்கினால் தான் பதவி விலகத் தயார் என்று பேச்சுக்கு துரைமுருகன் கூறியதாக சொல்லப்பட்டது. உண்மையிலேயே அவருக்கு அப்பதவியை விட்டுக் கொடுக்க ஆசை இல்லை என்றும், அதற்கு காரணம் துரைமுருகனை போன்றோர் அதிகார வர்க்கத்திலேயே இருந்தவர்கள் என்பதால் இவர்களால் பதவி எதுவும் இல்லாமல் இருக்க முடியாது, தற்போது எம்.எல்.ஏ பதவியும் இல்லாதததால் பொதுச் செயலாளர் பதவி இருந்தால் மட்டுமே அவரது மாவட்டத்திலேயெ அவருக்கு மரியாதை கிடைக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் தற்போதைய சூழலில் கனிமொழியை பொதுச் செயலாளராக்குவதே கட்சிக்கு சிறந்த முடிவு என்று தலைமை நினைப்பதால், துரைமுருகன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய அடம்பிடித்து வருவதாக உள்விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
துரைமுருகனின் இந்த முடிவு தலைமையை அப்செட்டாக்கியுள்ளதோடு, எம்.எல்.ஏ பதவி இல்லாத இவரிடம் இருந்து பொதுச் செயலாளர் பதவியை பறித்து மன உளைச்சலுக்கு ஆளாக்க வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளதாம்.
இதனால், துரைமுருகனையே பொதுச் செயலாளராக தொடர வைத்துவிட்டு, அவரது பவர்களை ஷேர் செய்து கனிமொழியிடம் கொடுத்துவிடலாம் என்று திமுக தலைமை முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில், துணைப் பொதுச்செயலாளர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதுடன், கனிமொழிக்கு ‘முதன்மை துணைப் பொதுச்செயலாளர்’ என்ற புதிய பொறுப்பை வழங்குவது குறித்து கட்சித் தலைமை ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
இதன் மூலம் கட்சியின் நிர்வாக அமைப்பில் புதிய சமநிலையை உருவாக்குவதோடு, எதிர்கால தலைமையை படிப்படியாக வடிவமைக்கும் முயற்சியாகவும் அரசியல் வட்டாரங்கள் இதைப் பார்க்கின்றன.

