தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைத்து 100 நாட்களை எட்டியுள்ள நிலையில், தவெகவினர் பலரும் சமீபகாலமாகவே முதலமைச்சர் விஜயை “அடுத்த பிரதமர் விஜய்” என்று கூறி வருவது அரசியல் களத்தில் ஹாட் டாபிக்காக போய்க் கொண்டிருக்கிறது.
தவெகவினர் தொடர்ந்த இப்படி பேசி வரும் நிலையில் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், தவெகவினர் ரசிகர் மன்ற மனநிலையில் இருப்பதாகவும், ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்றும் அவர் உறுதியாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்று 100 நாட்களே கடந்துள்ளன. இன்னும் நான்கரை ஆண்டுகளுக்கும் மேலான ஆட்சிக்காலம் மீதமுள்ள நிலையில், “அடுத்த பிரதமர் நீங்கள் தான்” என தவெகவில் உள்ள அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பேசி வருவது கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டப்பேரவையில் தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்தின்போது பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, “எதிர்காலத்தில் தென்னிந்தியாவில் இருந்தோ, தமிழ்நாட்டில் இருந்தோ ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டின் குரல் நாடாளுமன்றத்தில் பிரதமர் இடத்தில் இருந்து ஒலிக்க வேண்டும்” என விஜய்யின் பெயரைக் குறிப்பிடாமல் தெரிவித்தார்.
ஆதவை தொடர்ந்து ஆகஸ்ட் 18 ஆம் நடந்த சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் சரத்குமார், “எங்கள் இதயத்திலும், இல்லத்திலும், கோட்டையிலும் முதலமைச்சராக இருக்கும் எங்கள் தலைவா, நாளைய பாரதத்தின் பிரதமர் நீங்கள் தான். AM – PM பார்க்காமல் உழைக்கும் எங்கள் CM தான் நாளைய PM” என அடுக்குமொழியில் பேசியது பரப்பரப்பை ஏற்படுத்தியது. மேலும், முதலமைச்சர் விஜய் எதிர்காலத்தில் பிரதமராக வருவார் என பிரபல ஜோதிடர் ரத்தன் பண்டிட் பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தூத்துக்குடி மாநகரம் முழுவதும் முதலமைச்சர் விஜய்யை வாழ்த்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த சுதாகரின் புகைப்படத்துடன், “இன்றைய முதல்வர், நாளைய பிரதமர் விஜய்” என்றும், “தூத்துக்குடி மத்திய மாவட்ட தவெக” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.தூத்துக்குடியில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் தற்போது அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
மேலும் முதலமைச்சர் விஜய் சுற்றி நாளைய பிரதமர் நீங்கள் என்று தவெக தரப்பினரும் அவரை சுற்றியுள்ள அனைவரும் தொடர்ந்து பேசி வரும் நிலையில் இது குறித்தான எந்தவொரு பதிலும் விளக்கமும் அளிக்காமல் விஜய் மௌனம் காத்து காத்து வருவது அரசியல் வட்டாரங்களில் உண்மையாகவே பிரதமர் பதவிக்கு குறி வைக்கிறாரா என்று கேள்வி எழுகின்றன. நாளைய பிரதமர் நீங்கள் தான் என்று பேசுவது தற்போது அரசியல் களத்தில் ஹாட் டாபிக்காக போய்க் கொண்டு இருக்கிறது.

