Tamilnadu
oi-Halley Karthik
சேலம்: செப்.1ம் தேதி மேட்டூர் அணையை முதலமைச்சர் விஜய் திறக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. ஆனால், தற்போது அணைக்கான நீர்வரத்து குறைந்திருப்பதால், அணையை திறப்பதில் சிக்கல் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 89.24 அடியாக உயர்ந்திருக்கிறது. அணைக்கு நீர்வரத்து 7,454 கனஅடியாக இருக்கிறது. நீர் இருப்பு 51.5 டிஎம்சியாக இருக்கிறது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக 2,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

எவ்வளவு நீர் வேண்டும்?
வழக்கமாக அணையில் நீர்மட்டம் 90 அடியை எட்டினால், டெல்டா பாசனத்திற்காக நீர் திறக்கப்படும். இன்றோ, நாளையோ நீர்மட்டம் 90 அடியை எட்டிவிடும். இருந்தாலும், அணையை திறக்க 90 அடி நீர்மட்டம் மட்டும் போதுமானதல்ல. அணைக்கு தேவையான நீர் தொடர்ந்து வந்துக்கொண்டே இருக்க வேண்டும். நேற்று அணைக்கான நீர்வரத்து 8,827 கனஅடியாக இருந்த நிலையில்.. இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 7,454 கனஅடியாக குறைந்திருக்கிறது.
அணையை திறக்க கட்டுப்பாடு
பொதுவாக அணை 90 அடியை எட்டினாலும், அணைக்கான நீர் வரத்து அடுத்த சில நாட்களுக்கு 10,000 கனஅடியை விட அதிகமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் டெல்டா பாசனத்திற்காக அணை திறக்கப்படும். இது விதி இல்லை என்றாலும்.. காலங்காலமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையின்படி இப்படித்தான் அணை திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணைக்கான நீர் வரத்து ஒரே நாளில் 1,000 கனஅடி வரை குறைந்திருப்பது, அணையை திறப்பதில் சிக்கலை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.
அணையை திறப்பதில் சிக்கல்
இன்று தேதி ஆக.27. அணையை திறக்க இன்னும் 4 நாட்கள் இருக்கின்றன. இந்த 4 நாட்களிலும் அணைக்கான நீர் வரத்து குறைந்துக்கொண்டே சென்றால், டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்தாலும் அது விவசாயிகளுக்கு பயன் தராது. காரணம்.. இந்த காலத்தில் குறுவை சாகுபடி செய்யப்படுகிறது. குறுவைக்கு 100-120 நாட்கள் வரை தண்ணீர் தேவை. ஆனால், அக்.1ம் தேதி அணை திறக்கப்பட்டாலும் 45 நாட்களுக்கு மட்டுமே நீர் திறந்துவிடப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியெனில், மீதமுள்ள நாட்களுக்கு விவசாயிகள் ஆழ்துளை கிணற்று நீர் அல்லது பருவமழையை நம்பிதான் இருக்க வேண்டும்.
விவசாயிகள் ஏமாற்றம்
அரசின் அறிவிப்பை நம்பி.. குறுவை சாகுபடி செய்வது.. இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசைப்படும் கதையாகும். தஞ்சை, திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் 60%க்கும் அதிகமான விளைநிலங்கள் போர்வெல் இணைப்பை கொண்டிருக்கின்றன. காவிரி நீர் வந்தாலும், வராவிட்டாலும் போர் தண்ணீரை வைத்து வைத்து இந்த மாவட்டங்களில் குறுவை சாகுபடி நடந்துவிடும்.
பொய்த்துப்போன குறுவை சாகுபடி
ஆனால், கீழ் டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களில் 80% விளைநிலங்கள் மேட்டூர் நீரை நம்பிதான் இருக்கின்றன. மேட்டூர் நீரும் 45 நாட்களுக்குதான் வரும் என்றால்.. இந்த மாவட்ட மக்கள் குறுவை சாகுபடியை தொடங்க மாட்டார்கள். 100-120 நாட்களுக்கு தண்ணீர் இல்லாமல் குறுவை சாகுபடி தொடர்ந்தால்.. அது நஷ்டத்தில்தான் போய் முடியும்.
எனவே போதுமான நீரை கர்நாடகத்திலிருந்து வாங்கி பெற்றுக்கொண்டு பின்னர் அணையை திறக்க வேண்டும் என்று பலரும் கூறியுள்ளனர். நீர் வரத்து குறைவு, பருவமழை ஏமாற்றம், காலை வாரிய கர்நாடகா.. இப்படியான சூழலில் முதலமைச்சர் விஜய் திட்டமிட்டபடி செப்.1ம் தேதி அணையை திறப்பாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.


