இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) ஈதுல் அழ்ஹா எனும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இறைத்தூதராகக் கருதப்படும் இப்ராஹிம் (ஆபிரஹாம்) நினைவாக கொண்டாடப்படும் இந்த பண்டிகையில், ஆடு, மாடு, ஒட்டகம் என அவரவரின் வசதிக்கேற்றவாறு பிராணிகளைப் பலியிட்டு, அதன் இறைச்சியை ஏழைகளுக்கு வழங்கி, பக்ரீத் பண்டிகை காலங்காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பா.ஜ.க ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடுவதற்கு பல்வேறு நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் சிறுபான்மையினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் பக்ரீத் இறைச்சிக்காக மாடுகளை வாங்குவதை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிப்பதாக உள்ளூர் முஸ்லிம் அமைப்புகள் அறிவித்துள்ளன.

முஸ்லிம் சமூகத்தினரின் இந்தத் திடீர் புறக்கணிப்பு முடிவுக்குப் பின்னணியில் கடந்த வாரம் நடந்த சில சம்பவங்கள் முக்கியக் காரணமாக அமைந்துள்ளன. பக்ரீத் பண்டிகைக்காக சட்டப்பூர்வமாக மாடுகளை ஏற்றிச் சென்ற 11 வாகனங்களை உள்ளூர் அதிகாரிகளும், வலதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர்களும் வழிமறித்துப் பறிமுதல் செய்தனர். அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட கால்நடைகள் அனைத்தும் பசு பாதுகாப்பு இல்லங்களுக்கு (கோசாலைகளுக்கு) அனுப்பி வைக்கப்பட்டன. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மிரட்டல் சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள் வைக்கப்பட்டன.