அடேங்கப்பா.. மின்னல் மழை! நெதர்லாந்து நாட்டில் ஒரே நாளில் 3,01,137 மின்னல்கள்.. பின்னணியில் Code Red | Over 3 Lakh Lightning Discharges Recorded in Netherlands as Amsterdam Sees Rare Natural Light Show

Spread the love

International

oi-Vignesh Selvaraj

ஆம்ஸ்டர்டாம்: நெதர்லாந்து நாடு தனது வரலாற்றிலேயே பார்த்திராத ஒரு பிரம்மாண்ட இயற்கை பேரதிசயத்தை நேற்று அனுபவித்துள்ளது. வெறும் 24 மணி நேரத்திற்குள் நெதர்லாந்து முழுவதும் 3,01,137 முறை மின்னல் வெடிப்புகள் பதிவாகி உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

வானமே பிளப்பது போல விடிய விடிய பொழிந்த இந்த மின்னல் புயல், நெதர்லாந்து மக்களை அதிர வைத்துள்ளது. மின்னல் கீற்றுகள் வானத்தை ஊதா நிறத்தில் ஒளிரச் செய்த வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றன.

lightning

1 விநாடிக்கு 17 மின்னல்கள்

நெதர்லாந்து அரசின் வானிலை ஆய்வு நிறுவனமான KNMI வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஜூன் 28 அன்று உருவான இந்த மின்னல் புயல் (Supercell thunderstorm) அதன் உச்சக்கட்டத்தை எட்டியபோது நெதர்லாந்து மற்றும் வடக்கு ஜெர்மனி பகுதிகள் ஸ்தம்பித்தன.

30 நிமிடத்தில் 30,000 மின்னல்: புயலின் கோரத்தாண்டவம் உச்சத்தில் இருந்தபோது, வெறும் 30 நிமிடங்களில் சுமார் 30,000 மின்னல்கள் வானைத் தாக்கின. இதை கணக்கிட்டுப் பார்த்தால், ஒவ்வொரு ஒரு விநாடிக்கும் சராசரியாக 17 மின்னல்கள் என்ற கணக்கில் வானத்தில் மின்னல் வெடித்துச் சிதறியுள்ளது.

நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் உள்ளிட்ட நகரங்களில் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாத இடியுடன் கூடிய பெருமழை கொட்டித் தீர்த்தது.

என்ன நடந்தது?

இந்த விசித்திரமான மற்றும் ஆபத்தான வானிலை மாற்றத்திற்குப் பின்னால் ஒரு வலுவான அறிவியல் காரணம் உள்ளது. ஐரோப்பா முழுவதும் தற்போது வரலாறு காணாத வகையில் கடுமையான வெப்ப அலை (Heatwave) வீசி வருகிறது. நெதர்லாந்திலும் ஒரு வாரத்திற்கும் மேலாக வெப்பநிலை 30°C முதல் 40°C வரை பதிவாகி சுட்டெரித்தது. இதனால், அந்நாட்டு வரலாற்றிலேயே முதல்முறையாக ‘கோட் ரெட்’ அதீத வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த அதீத வெப்பமான சூழ்நிலையைத் தொடர்ந்து, திடீரென குளிர்ந்த காற்று வளிமண்டலத்திற்குள் நுழைந்தது. காற்றில் இருந்த அதிகப்படியான ஈரப்பதமும், வளிமண்டலத்தின் கடுமையான அழுத்த மாறுபாடும் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்ட போதுதான், இந்த மெகா மின்னல் புயல் உருவானது.

22 ஆண்டு கால சாதனையை முறியடிக்குமா?

நெதர்லாந்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் தான் மின்னல் பதிவுகள் முறையாக கணக்கிடப்பட்டு வருகின்றன. தற்போதைய 24 மணி நேர கணக்கின்படி 3 லட்சத்திற்கும் அதிகமான மின்னல்கள் துல்லியமாக கண்டறியப்பட்டுள்ளன.

இருப்பினும், விடுபட்ட அனைத்து தரவுகளும் முழுமையாகச் சேகரிக்கப்பட்டு ஆராயப்பட்டால், இந்த ஒற்றைப் புயலில் பதிவான மொத்த மின்னல்களின் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தொடக்கூடும் என்று வானிலை ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அப்படி நிகழ்ந்தால், இது நெதர்லாந்து வரலாற்றின் புதிய உச்சமாக மாறும்.

வானில் ஒரு பக்கம் பட்டாசு வெடிப்பது போன்ற கண்கொள்ளா காட்சியாக இது தெரிந்தாலும், விடிய விடிய இடிச்சத்தமும் மின்னல் கீற்றுகளும் நெதர்லாந்து மக்களை ஒட்டுமொத்தமாக மிரள வைத்துள்ளன என்பதை மறுக்க முடியாது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *