நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் தங்களுடைய வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது துரதிர்ஷ்டம் என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ நேற்று பேசியது, தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை கிளப்பி விட்டிருக்கிறது.
திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி சொல்ல முதல்வர் விஜய் சென்றபோது அங்கு அவரை வரவேற்ற திருச்சி எம்.பி. துரை வைகோ, தவெக-வுக்கு ஆதரவு தெரிவிக்க முடியாமல் போனதற்காக ரொம்பவே ஃபீல் செய்து பேசியிருந்தார்.
மதிமுக-வும் தவெக பக்கம் கிளம்ப தயாராகி விட்டதையே துரையின் பேச்சு சுட்டிக் காட்டுவதாகச் சொல்கின்றனர், அரசியல் விமர்சகர்கள். விரைவில் கட்சியின் பொதுக்குழு கூடி திமுக கூட்டணியில் தொடர்வதா இல்லையா என்பதை முடிவு செய்ய இருக்கிறதாம்.
இந்தப் பின்னணியில் மதிமுக-வின் இந்த திடீர் அரசியல் நிலைப்பாடு குறித்து அந்தக் கட்சியிலிருந்து சமீபத்தில் வெளியேறி திராவிட வெற்றிக் கழகம் என்ற தனிக்கட்சியைத் தொடங்கியிருக்கும் மல்லை சத்யாவிடம் பேசினோம்.

‘’முப்பது வருஷமும் மூணு மாசமும் நாடாளுமன்ற உறுப்பினரா இருந்திருக்கார் வைகோ. இதுல இருபத்தொன்பது வருஷம் திமுக சார்பாதான் அனுப்பப் பட்டிருக்கார். பார்லிமென்ட் டைகர், அது இதுன்னு பெருமையா சொல்லிக்கிடுறாரே, அந்தப் பெருமைக்குக் காரணமான வாய்ப்பைத் தந்தது திமுக.
திமுக-வுல அண்ணன் ஸ்டாலினை எதிர்த்துதான் மதிமுக-வையே உருவாக்கினார். ஆனா அதுக்குப் பிறகும்கூட அந்தக் கசப்பையெல்லாம் மறந்துட்டு இவரை டெல்லிக்கு அனுப்பி வச்சார் ஸ்டாலின்.
போதாக்குறைக்கு இவரது மகனுக்கும் திருச்சி தொகுதியை வாங்கித் தந்து அவரையும் எம்.பி ஆக்கினாங்க. திருச்சி தொகுதி துரைக்கு கிடைக்க ரொம்ப கஷ்டப்பட்டுச்சு. அந்தச் சமயத்துல நான் மதிமுக-வுல இருந்தேன்.
தொகுதியை காங்கிரஸ் கட்சியின் திருநாவுக்கரசர் எதிர்பார்த்தார். ஆனாலும் வைகோ விடாப்பிடியா பையனுக்கு கேட்டதால மும்பையில இந்தியா கூட்டணிக் கூட்டத்துல இருந்த ராகுல் கிட்ட நேரடியாப் பேசி தொகுதியை வாங்கித் தந்தார் ஸ்டாலின்.
இவ்வளவு செஞ்சிருக்கற கட்சிக்கு நீங்க காட்டுகிற விசுவாசம்தான் ‘துரதிர்ஷ்டம்’கிற வார்த்தையா?