
பாஜகவிலிருந்து விலகிய முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, இன்று புதிய அரசியல் இயக்கம் தொடங்குவதாகவும், வரவிருக்கும் பொதுத் தேர்தலில் தங்களது புதிய இயக்கம் கண்டிப்பாகப் போட்டியிடும் என்றும் அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தனது ராஜினாமாவை பாஜக தலைமை ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, இன்று மதியம் 12 மணிக்கு அண்ணாமலை தனது சமூக வலைதளப் பக்கங்களில் நேரலையில் தோன்றி இந்த அறிவிப்பை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், “புதிய அரசியல், புதிய பாதை, புதிய இயக்கம் இன்று முதல் தொடங்குகிறது. என்னுடைய கருத்துகளுக்குப் பாஜக தலைமை செவிசாய்க்காததால், அடிப்படை கட்டமைப்பை மாற்றும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளேன்” என்று கூறினார்.
தேசியக் கட்சிகளின் மொழி தமிழக மக்களுக்குப் புரிவதில்லை என்று குறிப்பிட்ட அவர், கடந்த 18 மாதங்களாகப் பாஜகவுடன் கருத்து வேறுபாடு நீடித்ததாகவும், கடந்த டிசம்பர் 4, 2025 அன்றே தனது விலகல் முடிவைத் தலைமைக்குத் தெரிவித்துவிட்டதாகவும் கூறினார். ஆனால், சட்டமன்றத் தேர்தலை முடித்துவிட்டு முடிவெடுக்குமாறு தலைமை அறிவுறுத்தியதால், அதுவரை தேர்தல் களத்தில் பணியாற்றியதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
இந்த நிலையில், புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கியுள்ள அண்ணாமலையின் அடுத்தக்கட்ட நகர்வுகள் என்பது தற்போது அரசியல் களத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
பிம்ப அரசியலைத் தவிர்த்து, சாமானியர்களுக்கான அரசியலை முன்னெடுப்பதே தனது இலக்கு என்று அண்ணாமலை கூறும், சிறந்த மூளைகளை அரசியலுக்குக் கொண்டு வரப் போவதாகவும், அவர், முதலில் இயக்கமாகத் தொடங்கிப் பலரையும் இணைத்து, அரசியல் கற்றுக்கொடுத்த பின்னரே இது கட்சியாக மாற்றப்படும் என்று கூறியுள்ளார். “மாறுவோம்… மாற்றுவோம்” என்பதே இந்த இயக்கத்தின் கொள்கை முழக்கமாகும். இதற்கிடையே, ‘இது நம்ம இயக்கம்’ என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய இணையதள முகவரியையும் (https://wetheleader.org/) அவர் வெளியிட்டுள்ளார்.
அப்துல்கலாம் பெயரில் கோவையில் அரசியல் மரபு நிறுவனம் உருவாக்க உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளது கொங்கு மண்டலத்தையே அவரது முதல் டார்கெட்டாக வைத்துள்ளார் என்பதை காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். காரணம், 2024-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை, 32.79% வாக்குகள் பெற்றிருந்தார். கோவையில் அண்ணாமலைக்கான மவுஸ் என்பது அதிகமாகவே உள்ளதால், கோவையை தன்னுடைய முதல் டார்கெட்டாக அண்ணாமலை கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தன்னோடு வருபவர்கள் பொறுமை, நிதானத்தோடு வர வேண்டும் என்று கூறும் அண்ணாமலை, உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்பாளர்களை தயார் செய்ய உள்ளதாகவும், உள்ளாட்சி தேர்தலுக்கு கோவையில் அப்துல் கலாம் நிறுவனத்தில் பயிற்சி வழங்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.