India
oi-Shyamsundar I
பெங்களூர்: அமெரிக்காவைச் சேர்ந்த ‘சென்டர் ஃபார் எக்ஸலன்ஸ் இன் எஜுகேஷன்’ மற்றும் இந்தியாவின் முன்னணி தொழில் குழுமமான அதானி குழுமம் ஆகியவை இணைந்து நடத்திய ரிசர்ச் சயின்ஸ் இனிஷியேட்டிவ் -இந்தியா 2026 திட்டத்தின் நிறைவு விழா, பெங்களூரில் உள்ள புகழ்பெற்ற இந்திய அறிவியல் கழக வளாகத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
அமெரிக்காவின் உலகப் புகழ்பெற்ற மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் (MIT) புகழ்பெற்ற ஆர்எஸ்ஐ கல்வி மாதிரியை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
முழுமையான நிதியுதவியுடன் 6 வார கால ஆராய்ச்சி
இந்த ஆண்டு, நாடு முழுவதிலும் இருந்து மிகக் கடுமையான தகுதித் தேர்வுகளின் அடிப்படையில் 32 திறமைமிக்க பள்ளி மாணவர்கள் இந்தத் திட்டத்திற்காகத் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்ட இந்த 32 மாணவர்களுக்கும் பெங்களூர் ஐஐஎஸ்சி (IISc) வளாகத்தில் தங்கிப் படிக்கும் வகையில் 6 வார கால தீவிர ஆராய்ச்சிப் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியின் மிக முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால், இதற்கான முழுச் செலவுகளையும் அதானி குழுமம் ஏற்றுக்கொண்டுள்ளது.
சிஇஇ-யுஎஸ்ஏ (CEE-USA) அமைப்பின் வழிகாட்டுதலோடு, மாணவர்களுக்கு முற்றிலும் இலவசமாக இந்த உலகத்தரம் வாய்ந்த பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
ஐஐஎஸ்சியின் முன்னணி பேராசிரியர்களின் நேரடி மேற்பார்வையில், மாணவர்கள் தங்களின் தனித்திறன்களை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பைப் பெற்றனர்.
மருத்துவம், இன்ஜினியரிங் தாண்டிய புதிய பார்வை
இந்தியாவில் நிலவும் தற்போதைய கல்விச் சூழல் அறிவியல் சூழல் குறித்து இந்தத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளரும், ஐஐஎஸ்சி பேராசிரியருமான தீபக் சைனி பேசுகையில், “பள்ளிப் பருவமே ஒரு மாணவரின் எதிர்கால வாழ்க்கையைத் தீர்மானிக்கும் முக்கியக் காலகட்டமாகும். ஆனால் , இந்தியாவில் பெரும்பாலான பள்ளி மாணவர்கள் மருத்துவம் அல்லது பொறியியல் என்ற குறுகிய வட்டத்திற்குள்ளேயே சுருங்கிவிடுகிறார்கள். ஆனால், தற்போதைய இந்தியாவுக்குப் புதிய கண்டுபிடிப்புகளையும், புதுமைகளையும் உருவாக்கும் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் (Pure Science Researchers) அதிகளவில் தேவைப்படுகிறார்கள்.
மாணவர்களை அறிவியல் துறையை நோக்கி ஈர்க்க சிறந்த வழி, அவர்களுக்கு உண்மையான ஆராய்ச்சியின் அனுபவத்தை வழங்குவதே ஆகும். அதைத்தான் இந்த நிறுவனம் வெற்றிகரமாகச் செய்துள்ளது. நேரடியாக மாணவர்கள் ஆராய்ச்சி செய்யும் அனுபவத்தை வழங்கி உள்ளோம். இதற்கு அதானி குழுமம் வழங்கிய ஆதரவும், அவர்களின் தொலைநோக்குப் பார்வையும் தான் மிக முக்கியமான காரணம்” என்று நன்றியோடு குறிப்பிட்டார்.
மாணவர்கள் நெகிழ்ச்சி
முழு நிதியுதவியுடன் கூடிய இந்த ஆராய்ச்சி திட்டம், தங்களின் வாழ்க்கையையே மாற்றியமைக்கும் ஒரு அற்புதமான அனுபவம் என்று பங்கேற்ற மாணவர்கள் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.
இதுகுறித்து மாணவர் சிவ் மாண்ட்லிக் கூறுகையில், “அதானி குழுமம் மற்றும் சிஇஇ அமைப்பின் ஆதரவோடு நடத்தப்பட்ட இந்த 6 வார கால தீவிர ஆராய்ச்சித் திட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இவ்வளவு சிறப்பான, உயர்தரமான ஒரு திட்டத்தை எவ்வித கட்டணமும் இன்றி, முற்றிலும் இலவசமாக நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு வழங்கிய அதானி குழுமத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது எங்களைப் போன்ற மாணவர்களின் பொருளாதாரத் தடைகளை உடைத்துள்ளது” என்றார்.
மற்றொரு மாணவரான பிரத்யுன் பேசுகையில், “நான் பங்கேற்ற ஆராய்ச்சித் திட்டங்களிலேயே இது மிகவும் சவாலானது மற்றும் பல புதிய விஷயங்களைக் கற்றுத் தந்தது. அறிவியல் தொடர்பாக நாங்கள் இங்கே கற்றுக்கொண்ட ஆராய்ச்சிகள் எங்களுக்குப் புத்துணர்ச்சி அளித்தன. இந்தத் திட்டம் மாணவர்களைத் அறிவியல் நோக்கி அழைத்துச்செல்ல உதவும். வரும் காலங்களில் மேலும் பல மாணவர்கள் உலகளாவிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த ஏதுவாக, இந்தத் திட்டம் அடுத்த 10 ஆண்டுகளுக்காவது தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
மாணவர் தனிஷ்க் கூறுகையில், “இங்கு நாங்கள் கல்வியை மட்டும் கற்கவில்லை; ஒரே மாதிரியான சிந்தனைகளும், அறிவியலின் மீது ஈர்ப்பும் கொண்ட பல புதிய நண்பர்களுடன் இணைந்து பழகும் அருமையான வாய்ப்பும் கிடைத்தது” என்றார்.
மாணவர்களின் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிப்பு, சிறந்த கண்டுபிடிப்புகளுக்கான விருதுகள் மற்றும் முன்னணி விஞ்ஞானிகளுடனான கலந்துரையாடல் ஆகியவற்றுடன் இந்த விழா வெற்றிகரமாக முடிவடைந்தது. இத்திட்டம் இந்தியாவின் அடுத்த தலைமுறை கண்டுபிடிப்பாளர்களுக்கு மிக வலுவான ஒரு அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளது என்பதில் ஐயமில்லை.
#WATCH | Bengaluru: Participant student Shiv Mandlik says, “I recently got an opportunity to participate in a 6-week course of the Research Science Initiative in India underwritten by the Adani Group and powered by the Center for Excellence in Education. I wholeheartedly like to… https://t.co/6AKBLn1H0J pic.twitter.com/IutlYCCfZE
— ANI (@ANI) July 9, 2026