மாதந்தோறும் ரூ.20 ஆயிரம் ரூ.30 ஆயிரம் சம்பாதிப்பவர்களின் பெரிய மனக்கவலையே ”வருகிற வருமானத்தில் நம்மால் குறைவாகத்தானே முதலீடு செய்ய முடிகிறது. லட்சம் ரூபாய்க்கு மேல் நமக்கு சம்பளம் கிடைத்தால், ரூ.30 ஆயிரம், ரூ.50 ஆயிரம் என சேர்க்கலாமே!” என்று நினைக்கிறார்கள். ஆனால், மாதம் தோறும் பல லட்சம் சம்பளம் வாங்குகிறவர்கள் அதிகளவில் பணத்தை முதலீடு செய்து பெரும் பணம் சேர்க்கிறார்களா என்று பார்த்தால் இல்லை என்கிற பதிலைத்தான் சொல்கிறது சமீபத்தில் வெளியான ஒரு சர்வே. முதலீட்டு ஆலோசனை நிறுவனமான மார்சிலஸ் மற்றும் டன் அண்ட் பிராட்ஸ்ட்ரீட் நிறுவனங்கள் இணைந்து, ‘த இந்தியா வெல்த் சர்வே 2025’ என்கிற சர்வேயை வெளியிட்டிருக்கிறது.
இந்த சர்வேயில் பல அதிர்ச்சியான உண்மைகள் நமக்குத் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் அதிகமான சம்பளத்தை ஈட்டுபவர்களில் 43% பேர் 20% பணத்தைக்கூட சேர்ப்பதில்லையாம். அது மட்டுமல்ல, அவர்களில் 20% பேர் உடனடிச் செலவுக்குத் தேவையான எமர்ஜென்ஸி பணத்தைக் கொஞ்சம்கூட இல்லாமலே இருக்கிறார்களாம். அப்படியானால் அவர்கள் ஆண்டுதோறும் சம்பாதிக்கும் கோடிக் கணக்கான சம்பளப் பணம் என்ன ஆகிறது, எங்கே போகிறது? அவர்கள் செய்யும் தவறுகள்தான் என்ன?

1. சேமிப்பா, செலவா?
பொதுவாக எல்லோருக்கும் வரும் கேள்விதான். ஆனால், நிறைய வருமானம் ஈட்டுபவர்களைப் படுத்தி எடுக்கும் கேள்வி இதுதான். சேமிப்பு என்பது நம்மிடம் பணம் சேர்ந்துகொண்டே இருக்கும். ஆனால், இது யாருக்கும் தெரியாது. எளிமையான உடை, பொருள்கள் என இருந்தால், ”சம்பாதிக்கும் பணத்துக்கேற்ற வாழ்க்கையை இவனுக்கு வாழத் தெரியவில்லையே!” என்று கேலி செய்வார்கள்.
ஆனால், செலவு என்பது அப்படி அல்ல. விலை உயர்ந்த மிடுக்கான உடைகள், பிராண்டட் பொருள்கள், விலை அதிகமான கார், ஸ்டார் ஹோட்டலில் சாப்பாடு என்று இருந்தால், ”அடேங்கப்பா, என்ன வசதி இவருக்கு! இருந்தா இந்த மனுஷன் மாதிரி இருக்கணும்” என்று எல்லோரும் சொல்வார்கள். முக்கியமாகப் பொறாமைப்படுவார்கள். இந்தப் பொறாமைப்படுதல் அல்லது ஊர் மெச்சுவது என்கிற விஷயத்தில் அதிகம் சம்பாதிப்பவர்கள் கவனமும் அக்கறையும் போவதால், சம்பாதிக்கும் பணம் முழுக்க அதற்கே போய்விடுகிறது.
யாருக்கும் தெரியாத சேமிப்பை செய்வதைவிட, எல்லோருக்கும் தெரியும் செலவு செய்வதுதான் சரி என்று பலரும் ஏகத்துக்கு செலவு செய்வதால், அவர்கள் சம்பாதிக்கும் அனைத்தும் செலவாகிக் காணாமலே போய்விடுகிறது.

2. அதிக விலையுள்ள பொருள்கள்…
அதிகமான பணத்தை சம்பளமாக ஈட்டுகிறவர்கள் சாதாரண பொருள்களை வாங்க முடியாது. உதாரணமாக, ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாயை சம்பளமாக ஈட்டுகிறவர் ரூ.10 லட்சம் விலையுள்ள காரை வாங்க முடியாது. அப்படியொரு காரை அவர் வைத்திருந்தால், அவரை யாரும் மதிக்கவே மாட்டார்கள். அவர் குறைந்தபட்சம் ரூ.50 லட்சம் ரூபாய் மதிப்பு காரைத்தான் வாங்கி வைத்திருந்தால்தான் அவருக்கு மரியாதை.
அதே போல, அவர் 1000 ரூபாய் மதிப்பு நல்ல சட்டையை அணிந்திருந்தால், அவரை யாரும் மதிக்க மாட்டார்கள். வேர்த்துக் கொட்டும் வெயிலிலும் 10,000 ரூபாய் மதிப்புள்ள கோட், சூட்டினை போட்டிருந்தால் அவரை நான்கு பேர் மதிப்பார்கள்.
இப்படி ஒவ்வொரு விஷயத்தில் விலை அதிகமான பொருள்களையும் சேவைகளையும் பயன்படுத்த அவர்கள் கட்டாயத்துக்கு உள்ளாவதால், அவர்கள் சம்பாதிக்கும் பணம் செலவு செய்வதற்கே போய்விடுகிறது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் இந்த லிங்கினை சொடுக்கி தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம்… https://labham.money/events/webinar-jun07-2026
3. வேறுபட்டுத் தெரியவேண்டும்…
”நான் சாதாரண மனிதன் இல்லை. அதிகமாக சம்பாதிப்பவன்” என்கிற எண்ணம் பார்ப்பவர்கள் அனைவருக்கும் வரவேண்டும் என்பதற்காகவே நிறைய சம்பாதிப்பவர்கள் நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கிறது. இப்படி வித்தியாசமாகத் தெரியவேண்டும் என்கிற எதிர்பார்ப்பினால் விலை அதிகமான பொருள்களையும் சேவைகளையும் மட்டுமே தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் அதிகமான பணத்தை சம்பாதிப்பவர்களுக்கு வந்துவிடுகிறது.
அதிகமாகப் பணம் சம்பாதிப்பவர்கள் தங்களுக்குப் பிடித்தமான ஒரு விஷயத்தை செய்வதைவிட மற்றவர்களுக்குப் பிடித்த மாதிரியான ஒரு விஷயத்தையும் செய்யும் எக்கச்சக்கமான பணத்தை செலவு செய்யவேண்டி இருக்கிறது. உதாரணமாக, ஒரு வெளிநாட்டுக்கு இன்பச் சுற்றுலா சென்றுவர வேண்டும் எனில், ”சுவிட்சர்லாண்ட், ஜெர்மனி என்று போகாமல், போயும் போயும் அந்த நாட்டுக்குப் போயிருக்கிறானே!” என்று யாரும் சொல்லிவிடக் கூடாது என்பதற்காக அதிகமான பணத்தை செலவு செய்து, தேவை இல்லாத நாடுக்குப் போய் வருகிறவர்கள் ஏராளம்.

4. வரியாகப் போகும் பெரும் பணம்…
அதிகமாக சம்பாதிப்பவர்களால் அதிகமாக சேமிக்க முடியாமல் போவதற்கு இன்னொரு முக்கியமான காரணம், வருமான வரி. ஒருவர் ஒரு ஆண்டுக்கு ரூ.1 கோடி சம்பளமாகப் பெறுகிறார் எனில், 30% பணத்தை அவர் வரியாகக் கட்டவேண்டும். அதாவது, 30 லட்சம் ரூபாயை வரியாகக் கட்ட வேண்டும். சம்பாதிக்கும் பணத்தில் நான்கில் ஒரு பங்குக்கும் அதிகமாகவே வரி கட்டவே சரியாகப் போய்விடுகிறது. மீதமுள்ள பணமும் நாலு பேர் நம்மை மெச்சிப் புகழ்ந்து, பொறாமைப்பட வேண்டும் என்பதற்காக செலவு செய்துவிடும்போது சேமிப்பு எதுவும் செய்ய முடியாமல் அல்லது குறைவாக சேமிப்பது என்பது இயற்கைதானே!

30% முதலீடு…
ஆக, நிறைய பணம் சம்பாதிப்பவர்கள் அனைவரும் நிறைய சேமிக்கிறார்கள் அல்லது முதலீடு செய்கிறார்கள் என்பது தவறான எண்ணம். சேமிப்பது அல்லது முதலீடு செய்வது என்பது நாம் சம்பாதிக்கும் பணத்தைப் பொறுத்தது அல்ல. நாம் நம்முடைய எதிர்காலத்திற்காக எவ்வளவு பணத்தை சேர்க்க நினைக்கிறோம் என்பதைப் பொறுத்ததுதான். சிலர் மாதந்தோறும் ரூ.20 ஆயிரம்தான் சம்பளமாகப் பெறுவார்கள். ஆனால், 10% பணத்தை அதாவது ரூ.2 ஆயிரத்தை மாதந்தவறாமல் சேமித்துக்கொண்டே இருப்பார்கள். நம் மாதச் சம்பளத்தில் குறைந்தபட்சம் 10% முதல் 30% வரை ஒருவர் மாதந்தோறும் தவறாமல் சேமித்து, அதை பணவீக்கத்தைவிட அதிக வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்ட் போன்ற திட்டத்தில் நீண்ட காலத்தில் முதலீடு செய்துவந்தால், அவரால் நிச்சயமாக அதிகமான பணத்தைச் சேர்க்க முடியும்! இதற்குத் தேவை தெளிவான திட்டமிடலும், முறையான வழிகாட்டலுடன் கூடிய முதலீடும்தான். எதிர்காலத்துக்குத் தேவையான பணத்தை சேர்க்க வேண்டும் என்கிற மனம் இருந்தாலே போதும், நாம் சேமிக்கவும் முதலீடு செய்யவும் ஆரம்பித்துவிடுவோம்!

முதலீட்டு ஆலோசனை வேண்டுமா?
வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தங்கள் முதலீட்டை சரியானபடி அமைத்துக்கொள்ள ஆலோசனை பெற, பின்வரும் லிங்கினைக் கிளிக் செய்து, தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள்… NRI Calendly – https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-nri
Labham Youtube Video: www.youtube.com/@labham_money
Labham Website: https://labham.money/tamil
முதலீட்டாளர்களின் கவனத்துக்கு:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. இதில் முதலீடு செய்யும்முன் திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படித்துப் பார்த்து, சுயமாக முடிவெடுக்க வேண்டுகிறோம்!