ஆர்த்தியின் மனுவுக்குப் பதிலளிக்கும் வகையில் நடிகர் ரவிமோகன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், நீதிமன்ற உத்தரவை மீறிய தனது செயலுக்குப் பகிரங்க மன்னிப்பு கோருவதாகவும், இதனைப் பொதுவெளியில் வெளியிடத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், “எனது கருத்துக்களால் மனவேதனை அடைந்த அல்லது பாதிக்கப்பட்ட அனைவரிடமும் வருத்தத்தையும் மன்னிப்பையும் தெரிவிக்கிறேன்” என்றும் அவர் அந்த மனுவில் பதிவிட்டிருந்தார்.

நடிகர் ரவிமோகனின் மன்னிப்பைப் பதிவு செய்துகொண்ட சென்னை உயர்நீதிமன்றம், நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக அவர் பத்திரிகைகளில் பொது அறிவிப்பு வாயிலாக மன்னிப்பு கோருவதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. அத்துடன், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இனிமேல் தேவையில்லாமல் பொதுவெளியிலோ அல்லது ஊடகங்களிலோ விவாகரத்து தொடர்பாக எந்தவொரு கருத்தையும் பேசக்கூடாது என்றும் இரு தரப்புக்கும் அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தது.