'தமிழகத்தை ஆளும் கவர்ச்சிக் கூட்டம்; உள்ளாட்சித் தேர்தலில் பதிலடி!' – சூளுரைத்த நேரு, பிரியா!

Spread the love

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மறைந்த தலைவருமான கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்தநாள் விழா சென்னையில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் இன்று கொண்டாடப்பட்டது. அதில் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடைபெற்றது.

திமுக விழா
திமுக விழா

முன்னாள் அமைச்சர்கள் சேகர் பாபு, நேரு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் கழக உறுப்பினர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய சென்னை மாநகராட்சி மேயர் பிரியா “இன்றைக்குப் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்துக் கொண்டு, ‘நாங்கள் அதைச் செய்வோம், இதைச் செய்வோம்’ என்று ஒரு கவர்ச்சிக் கூட்டம் சுற்றிக் கொண்டிருக்கிறது. எந்தவொரு களப்பணியும் செய்யாமல், மக்களுக்குப் பொறுப்பேற்காமல் அவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்தவொரு பொறுப்புணர்ச்சியும் கிடையாது.

ஆனால், நம்முடைய தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த முறை ஆட்சிப் பொறுப்பேற்ற போது கொரோனா காலம் உச்சத்தில் இருந்தது. சொந்தப் பிள்ளையே பெற்றோரைக் கைவிட்ட அந்த இக்கட்டான சூழலில் கூட, ‘நான் தான் முதலமைச்சர், நானே இதற்குப் பொறுப்பு’ என்று நேரடியாக மருத்துவமனைகளுக்குச் சென்று மக்களைக் காப்பாற்றியவர் நம் முதல்வர். ஆட்சி இருந்தாலும் இல்லாவிட்டாலும் திமுக எப்போதும் மக்களோடுதான் இருக்கும்” என்று மிக உணர்ச்சிகரமாகப் பேசினார்.

அமைச்சர் கே.என். நேரு பேசியது, ‘சென்னை உட்பட தமிழகத்தின் பல நகரங்களைச் சுத்தமாக வைத்திருப்பதிலும், பொதுமக்களிடம் அரசுக்கு நல்ல பெயர் வாங்கித் தருவதிலும் மிக முக்கியப் பங்கு நம்முடைய தூய்மைப் பணியாளர்களுக்குத் தான் உண்டு.

திமுக விழா
திமுக விழா

தூய்மைப் பணியாளர்களைத் தொழிலதிபர்களாக மாற்ற வேண்டும் என்பதுதான் எங்கள் தலைவரின் கனவு. அதற்காகத்தான் மெட்ரோ வாட்டர் துறையில் பணிபுரிந்து மறைந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு 700 கோடி ரூபாய் மானியத்தில் சொந்தமாகக் கழிவுநீர் அகற்றும் வண்டிகள் வழங்கி, அவர்களைத் தொழிலதிபர்களாக மாற்றியிருக்கிறோம்.

இன்னும் 8 மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் வரவிருக்கிறது. ‘திமுகவால் முடியுமா?’ என்று கேட்பவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்த பிரம்மாண்டக் கூட்டம் அமைந்துள்ளது. மக்கள் பணியாற்ற மீண்டும் கழகமே வெல்லும், புதியவர்களுக்கு இங்கு இடமில்லை” என்று பேசினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *