Tamilnadu
oi-Yogeshwaran Moorthi
சென்னை: தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அதிகாரம் இல்லாத பதவிகளை கொடுத்து முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் ஏமாற்றிவிட்டதாக அக்கட்சியினரால் பேசப்பட்டு வருகிறது. தவெகவில் அமைப்புச் செயலாளர் பதவிக்கோ, துணை பொதுச்செயலாளர் பதவிக்கோ எந்த அதிகாரமும் இல்லை என்று புலம்பும் நிர்வாகிகள், உள்ளாட்சித் தேர்தலில் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்குமா என்ற சந்தேகத்தில் இருக்கின்றனர்.
தவெக ஆட்சி அமைத்த பின் அதிமுகவில் இருந்து சிட்டிங் எம்எல்ஏ-க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் என்று பலரும் அந்த பக்கம் சாய்ந்தனர். குறிப்பாக சி விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இருவரும் தவெகவில் இணைந்தது பலரையும் திரும்பி பார்க்க வைத்தது. ஜூன் மாதம் கடைசியில் அதிமுகவில் இருந்து விலகிய இருவரும், ஜூலை முதல் வாரத்தில் தவெகவில் ஐக்கியமாகினர்.

அப்போதே இணைப்பு விழாவிற்கு விஜய் வராததால், அவரின் ஆதரவாளர்கள் அப்செட்டாகினர். இதன்பின் அதிமுகவில் இருந்து வந்தவர்கள் அனைவரையும் ஒரே நாளில் பனையூரில் வைத்து விஜய் சந்தித்தார். அதன்பின் விஜயபாஸ்கர் விராலிமலை தொகுதியில் பணிகளை தொடங்கிவிட்டார். தவெகவினருக்கு பிரியாணி விருந்து வைப்பது, நிர்வாகிகளுடன் இணக்கம் என்று அக்கட்சியினருடன் நெருக்கம் காட்டி வந்தார்.
இருப்பினும் விஜயபாஸ்கருக்கு எந்த பதவியும் அளிக்கப்படவில்லை. தவெகவில் இணைந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் கடந்துவிட்ட சூழலில், பொறுப்பு அறிவிக்காதது ஏன் என்று புதுக்கோட்டையில் அவரின் ஆதரவாளர்கள் கொந்தளிக்க தொடங்கிவிட்டனர். உள்ளாட்சித் தேர்தலும் இன்னும் 6 மாதத்தில் வரும் என்பதால், அவரை நம்பி வந்தவர்கள் மத்தியில் ஒருவித குழப்ப மனநிலை ஏற்பட்டது.
இதனை விஜயபாஸ்கரும் நேரடியாகவே தவெக தலைமைக்கு கூறிவிட்டார். இதன்பின் தான் உடனடியாக ஜான் ஆரோக்கியசாமி உள்ளிட்டோருடன் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. அப்போது மாவட்டச் செயலாளர் பதவியை கொடுத்தால் பின் விளைவுகள் ஏற்படும் என்று கருதிய தவெக தலைமை, உடனடியாக புதிய பொறுப்புகளை உருவாக்கி இருக்கிறது. அதுதான் அமைப்புச் செயலாளர் மற்றும் துணை பொதுச்செயலாளர் என்பவை.
இந்த இரு பொறுப்புகளுக்குமே அதிகாரம் கிடையாது. மாவட்ட அமைப்புச் செயலாளர் என்ற பொறுப்பு மாவட்டச் செயலாளர்களை ஒருங்கிணைக்கும் பதவி தான். மற்றபடி அந்த பதவிக்கு எந்த அதிகாரமும் இல்லை. இதனால் விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்திருக்கின்றனர். அதிகாரமில்லாத டம்மி பதவியை வைத்து நமக்கு எப்படி பதவி பெற்றுக் கொடுப்பார் என்ற முனுமுனுப்புகள் எழுந்துள்ளன.
அதேபோல் மாவட்டச் செயலாளர் பதவி என்றாலும் கூட ஒரு தொகுதிக்கு மட்டுமே தவெக தலைமை நியமனம் செய்கிறது. மண்டல பொறுப்பை எதிர்பார்த்த விஜயபாஸ்கருக்கு ஒரு தொகுதிக்குள் அடைத்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியதாக தெரிகிறது. இதனால் அவரின் ஆதரவாளர்கள் விரைவில் மாற்று கட்சிகளுக்கு நகரக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது.

