அதிமுகவில் பிளவு ஏற்பட்டு டிடிவி தினகரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு அம்மா மக்கள் கழகம் எனும் கட்சியை தொடங்கி கடந்த 9 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். ஆரம்பத்தில் அதிமுக எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருந்த தினகரன். கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து களம் கண்டார்.
இன்றைய தினம் அமமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை தினகரன் சந்தித்தார், அப்போது அவர் பேசுகையில், இப்போதும் அதிமுகவுடன் இருக்கிறேன். அதிமுக கூட்டணியில்தான் இருக்கேன். விஜய் ஆட்சிக்கு ஆதரவு தர வேண்டும் என என்னிடத்தில் பலபேர் பல வழிகளில் முயற்சி செய்தனர். ஆனால், அதிமுக கூட்டணியில இருக்கிற சூழ்நிலையில் மற்ற கட்சிகள் மாதிரி நேர் எதிரான இன்னொரு கூட்டணியில போய் ஆதரவு கூடாது; அது தவறு என நினைத்தேன்.
தேசிய ஜனநாயக கூட்டணியில, அமமுக ஒரு தொகுதியில்தான் வெற்றி பெற முடிந்தது. இருந்தாலும் நாம் அதிமுக கூட்டணியில இருப்பதுதான் கூட்டணி தர்மம். அதுதான் என்னுடைய குணாதிசயமும் கூட.இந்த கடினமான நேரத்திலும் நான் அண்ணா திமுகவுக்கு ஆதரவாகவே இருக்கிறேன். அதிமுகவும் அமமுகவும் ஒரே கட்சியா இணைந்துதான் ஆகணும் அப்படிங்கிற ஒரு சூழ்நிலை வந்திருப்பதாக, மற்றவர்கள் நினைக்கலாம்.
எங்க கட்சியில எந்த நிர்வாகிகளும், தலைமை கழக நிர்வாகிகளும், மாவட்ட செயலாளர்களும் என்கிட்ட அந்த மாதிரி பேசல. சரி, பார்ப்போம்.. வெயிட் பண்ணுவோம். இவ்வாறு டிடிவி தினகரன் ட்விஸ்ட் வைத்துள்ளார். இதன் மூலம் அதிமுக, அமமுக இணைப்பு தொடர்பாக திரைமறைவில் பேச்சுவார்த்தை நடப்பது உறுதியாகி உள்ளது.

