அதிமுக ஆர்ப்பாட்டத்திற்கு NO சொன்ன மாஜிக்கள்… ஷாக்கில் எடப்பாடியார்! – Kumudam

Spread the love

தவெக அரசு தேர்தல் பிரச்சாரத்தின்போது விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடியை முழுமையாகத் தள்ளுபடி செய்து தரப்படும் என்று தனது தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டிருந்தது.

தவெக அரசு, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனில் ரூ.75,000 வரை பெற்றிருந்தால் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளது. ஆனால், ரூ.75,000-க்கு மேல் கடன் பெற்றோருக்கு ரூ.35,000 மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்ற வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதியில் 100 சதவீதம் முழு கடன் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போதைய நிபந்தனை மற்றும் தரம் பிரிக்கும் முறை விவசாயிகளிடையே எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அது மட்டுமில்லாமல், காவிரி நீர் விவகாரம் என்பது தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் நீண்டகாலமாகவே இருந்து வரும் ஒரு மாபெரும் பிரச்சனையாகும். தற்போது தமிழ்நாட்டிற்கு நீர் தரமாட்டோம் என்றும், கர்நாடகாவில் மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், அதனை எதிர்த்து கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், தண்ணீர் தர முடியாது என்றும், மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்றும் கூறியிருக்கிறார்.

ஆனால், இதனை எதிர்த்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் தவெக அரசு மெத்தனப் போக்கைக் கடைப்பிடிப்பதைக் கண்டித்து, அதிமுக சார்பில் ஆகஸ்ட் 14ஆம் தேதி நாளை தமிழகம் முழுவதும் அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஏற்கெனவே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

நாளை நடைபெற இருக்கின்ற இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தேனி மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும், ராமநாதபுரத்திற்கு நத்தம் விஸ்வநாதனும், சேலத்திற்கு தங்கமணியும் பொறுப்பாளர்களாக எடப்பாடி பழனிசாமி நியமித்திருந்தார்.

இந்த நிலையில், சொந்த மாவட்டத்தைவிட்டு வேறு மாவட்டத்துக்குப் பொறுப்பேற்று ஆர்ப்பாட்டத்தை நடத்தக் கட்சித் தலைமை அறிவுறுத்தியிருப்பதை ஏற்க மாட்டோம் என்று அதிமுக அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் கூட்டாக எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதிமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்துக்கு முழு ஆதரவு அளிக்கிறோம். ஆனால், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

ஏற்கெனவே, கட்சியின் மாவட்டச் செயலாளர் பொறுப்பை மீண்டும் வழங்காததால் அதிருப்தியில் இருக்கும் அவர்கள், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகிகளான சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தவெக அரசுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க நடைபெற்ற வாக்கெடுப்பின்போது ஆதரவு அளித்த நிலையில், தற்போது தவெக அரசைக் கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மறுக்கிறார்களா? என்ற கேள்வி எழுகிறது. மேலும், ஏற்கெனவே எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள் செயல்பாடுகளில் அதிருப்தியில் உள்ள  நிலையில், தற்போது இதன் மூலம் அவர்கள் மேலும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *