
தவெக ஆட்சி அமைந்த முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது முதலமைச்சர் விஜய் முன்வைத்த ‘பார்ட்டி ஃபண்ட்’ குற்றச்சாட்டு, அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
முந்தைய ஆட்சிக் காலத்தில் டாஸ்மாக் உள்ளிட்ட அரசுத் துறைகளின் வருவாய் மற்றும் ஒப்பந்த நடவடிக்கைகளில் இருந்து கட்சிக்காக நிதி திரட்டப்பட்டதாக முதலமைச்சர் விஜய் குற்றம்சாட்டிய நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக உறுப்பினர்கள், குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இருந்தால் அவற்றை சட்டப்பேரவையில் சமர்ப்பிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து திமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
‘பார்ட்டி ஃபண்ட்’ என்று சொன்ன உடனே திமுக எதற்குப் பயப்படுகிறது? ‘பார்ட்டி ஃபண்ட்’ என்றுதானே சொன்னோம், எந்தக் கட்சி என்று நாங்கள் சொல்லவில்லையே… குற்றம் உள்ள நெஞ்சுதான் குறுகுறுக்கும் என்று தவெகவினர் திமுக மீது விமர்சனங்களை முன்வைத்தனர். ஆதாரம் இல்லாமல் ஓர் குற்றச்சாட்டை ஆளும் அரசு முன்வைப்பதாக திமுக தரப்பில் கூறப்பட்டது.
இந்த நிலையில், இந்த விவகாரத்தை அரசியல் குற்றச்சாட்டாக மட்டும் விட்டுவிடாமல், ஆவணங்களுடன் பதிலளிக்க தவெக அரசு தயாராகி வருவதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதாவது, கடந்த சில ஆண்டுகளின் அரசுத் துறை வருவாய், ஒப்பந்தங்கள், நிதிப் பரிமாற்றங்கள் மற்றும் அரசுக் கருவூலத்தில் சேர வேண்டிய தொகைகள் தொடர்பான ஆவணங்களைத் திரட்ட அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சட்டப்பேரவையில் பேசிய தவெக எம்எல்ஏ ஆர்.எஸ்.முருகன், திமுக ஆட்சியில் சாலை ஒப்பந்தங்கள் மற்றும் திட்டப் பணிகளுக்கு கமிஷன் மற்றும் கட்சி நிதி வசூலிக்கப்பட்டதாக ஆதாரங்கள் இல்லாமல் பொத்தாம் பொதுவாகக் கூறியிருந்தார். இந்த விவகாரத்தில் ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் திமுக அரசு மீது கடுமையான தாக்குதலை முன்னெடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நெடுஞ்சாலைத் துறை பணி ஒப்பந்தத்துக்காக கடந்த திமுக ஆட்சியில் ‘பார்ட்டி ஃபண்ட்’ வாங்கப்பட்டதாக சூசகமாகப் பேசியதோடு, எதிர்க்கட்சித் தலைவரே அதற்கு ஆதாரம் என்றும் அவர் கூறியது சர்ச்சையாகி வருகிறது.
ஆனால், அவரது பேச்சுக்குப் பின்னால் இருக்கும் காரணம் வேறு என்றும் கூறப்படுகிறது. அதிமுக ஆட்சிக்காலத்தில் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரராக செல்வாக்குடன் வலம் வந்த அவர், எடப்பாடி பழனிசாமிக்கு வரவு, செலவு உள்ளிட்ட விவகாரங்களில் நெருக்கமானவராக இருந்ததாகவும், பின்னர் திமுக ஆட்சிக்காலத்திலும் அதே செல்வாக்குடன் ஒப்பந்தப் பணிகளைச் செய்து வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அப்போதும் ‘பார்ட்டி ஃபண்ட்’ பொறுப்புகளைக் கவனித்தது இவர்தான் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், 2021ஆம் ஆண்டு தேர்தலின்போது திமுக தலைமையிடம் சீட் கேட்டதாகவும், ஆனால் அவருக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து உடனடியாக தவெகவில் ஐக்கியமானார்.
சட்டமன்றத்தில் திமுகவுக்கு எதிராகப் பேசுவதன் மூலம் முதலமைச்சர் விஜயின் கவனத்தைப் பெற்று அமைச்சராகிவிடலாம் என்பதே அவரது ‘ஹிடன் அஜெண்டா’ என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுவதாகக் கூறப்படுகிறது.