அதிரடி விலை உயர்வுக்கு கரணம் என்ன? அமைச்சர் கொடுத்த விளக்கம்… – Kumudam

Spread the love

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று சமூகநீதித்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஆகியவற்றின் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் என விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

சட்டப்பேரவை இன்று தொடங்கியதும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு தொடர்பாக எதிர்க்கட்சிகள் மற்றும் கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை முன்வைத்தார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின். அதில் “துவரம் பருப்பு, அரிசி, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்” என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “வறட்சி காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து வந்த அரிசியின் வரத்தும் குறைந்ததால் விலை உயர்ந்துள்ளது” என்று  கூறினார்.

அதன்பின், எம்எல்ஏ கணேஷ்குமாரும் பாமக சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்தார். அதில் “அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலைவாசி 30 முதல் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது” என்று கணேஷ்குமார் கூறினார்.

அதன்பின், தாரகை கத்பட் காங்கிரஸ் சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை அரசின் முன் கொண்டுவந்தார். அதில் “பண்டிகை காலங்களில் மளிகை பொருள் தொகுப்பு தருவதைப் போல் ரேஷனில் தற்போதும் வழங்க வேண்டும்” என்று தாரகை கத்பட் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, சிபிஐ எம்எல்ஏ ராமச்சந்திரனும் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை அவையில் பதிவு செய்தார். அதில் “பண்டிகை காலம் வருவதால் அத்தியாவசிய பொருட்களும் ரேஷன் கடை மூலம் வழங்க வேண்டும்” என்று ராமச்சந்திரன் கூறினார்.

அதன்பின், சிபிஎம் எம்எல்ஏ செல்லசாமி  சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் “எரிபொருள் விலை உயரும் நேரத்தில் மளிகை பொருட்கள் பதுக்கல், அதனால் விலை உயர்வு சாதாரணம்” என்று செல்லசாமி கூறினார். 

அமைச்சர் வெங்கட்ரமணன் விளக்கம்:

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு குறித்து பதிலளித்த அமைச்சர் வெங்கட்ரமணன், சர்வதேச அளவிலான காரணிகளும் விலை உயர்வில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

“ஈரான் போர், எரிபொருள் விலை உயர்வால் தான் விலைவாசி பொருட்களும் விலை உயர்ந்துள்ளது” என்று அமைச்சர் வெங்கட்ரமணன் தெரிவித்தார்.

மேலும், பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலையை அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார்.

“வெங்காயம் உள்ளிட்ட 41 பொருட்களுக்கான விலையை தினமும் கவனித்து வருகிறோம்” என்றும்,  

“உணவுத்துறை அமைத்து கண்காணித்து வரும் நிலையில், விலை அதிகமாக உள்ள பொருளை அரசு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் கூறினார்.

பசுமை அங்காடிகள் மூலம் விற்பனை:

இந்த விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக “கடந்த ஆட்சிகளில் நடந்தது போல் ரேஷன் கடை மூலம் மட்டுமல்ல, பசுமை அங்காடி மூலமும் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும்

“அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது” என்று அமைச்சர் வெங்கட்ரமணன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு தொடர்பான விவாதம் நடைபெற்ற நிலையில், விலைவாசியை கட்டுப்படுத்த அரசு மேற்கொள்ள உள்ள நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் அளித்த விளக்கம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *