சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சட்டமன்றத்தில் பேசிய திமுக எம்.எல்.ஏ ரகுபதி, “நிதியமைச்சர் கையில் ஜெபமாலையோடு வந்து பட்ஜெட்டை அறிவித்தார். வேளாண் அமைச்சர் திருப்பதி லட்டோடு வந்து வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ஒன்றே குலம் ஒருவன் தேவன் என்கிற கொள்கையை கொண்டது திமுக.
தகவல் உரிமை ஆணையத்தின் பொறுப்புகள் ஏன் நிரப்பப்படவில்லை? தகவல் ஆணையத்திடம் தகவல் கேட்டால் பதிலளிக்க ஆணையர்கள் இல்லை என்கிறார்கள். எதிலும் வெளிப்படைத்தன்மையாக இருக்கிறோம் எனக் கூறும் அரசு தகவல் உரிமை ஆணையத்தின் பொறுப்புகளை நிரப்பாமல் இருப்பது ஏன்?

ஒரு ஆங்கில பத்திரிகையில் பார்த்தேன். அதில் காங்கிரஸ் எம்.பி பிரவீன் சக்கரவர்த்தி தமிழக அரசின் கொள்கை வழிகாட்டு குழுவில் இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. அது உண்மையா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் விஸ்வநாதன், ” பிரவீன் சக்கரவர்த்தி இந்த அவையின் உறுப்பினர் கிடையாது. தமிழக அரசின் எந்த குழுவிலும் அவர் பொறுப்பில் இல்லை. பத்திரிகைகள் ஒரு செய்தியை பலவாறு எழுதுகின்றன. அதை வைத்துக் கொண்டு பேச வேண்டாம்” என்றார்.
தொடர்ந்து பேசிய ரகுபதி, ” நிதிநிலை அறிக்கையில் கசிவு…கசிவு என புது வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறீர்கள். அது என்ன கசிவு? என்று கேட்டார்.
அதற்கு பதில் அளித்த நிதியமைச்சர் மரிய வில்சன், ” ஒவ்வொரு துறையிலும் எப்படி நிதிக் கசிவு நடந்திருக்கிறது என்பதை தணிக்கை செய்து வருகிறோம்.

மூன்று துறைகளுக்கான தணிக்கை முடிந்துவிட்டது. நீங்கள் இப்படி கேட்பீர்கள் என்று தெரிந்தே முதல்வர் எங்களை அழைத்து தணிக்கை பற்றி கேட்டிருக்கிறார். கடந்த முறை பார்ட்டி பண்ட் என்றவுடன் அவையை விட்டு வெளியேறினீர்கள். இனி அப்படி இருக்காது. எல்லாவற்றையும் தணிக்கை செய்து கோப்புகளோடு அவையில் நிரூபிப்போம்” என்று கூறியிருக்கிறார்.
தொடர்ந்து பேசிய ரகுபதி, ” இப்போது பில் வாங்க ஒவ்வொரு அலுவலகத்திற்கும் போய் பாருங்கள். நீர்வளத்துறையில் 3% கொடுத்தால்தான் பில் என்று சொல்கிறார்கள். பொதுப்பணித்துறையில் 5% கொடுத்தால்தான் பில் என்று சொல்கிறார்கள்” என்றார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அமைச்சர் ஆனந்த், ” ஆதாரத்துடன் பேச வேண்டும்; அது பழைய காலம்… இந்தக் காலத்தில் ஒத்த ரூபாய் நாங்கள் வாங்கினால், நாளைக்கே எங்களை இங்கே உட்கார வைக்க மாட்டார் எங்களுடைய முதலமைச்சர்; வாயால் பேசுவது எல்லாம் சரிதான். நீங்கள் நிரூபியுங்கள் …எதுமே இல்லாமல் நீங்கள் பாட்டுக்கு பேசினால் எப்படி?” என்று கேட்டிருக்கிறார்.