International
oi-Vigneshkumar
பாலி: இந்தோனேசியாவின் பாலி தீவில் கடைப்பிடிக்கப்படும் இந்து சடங்கை மீறி, அதனை அவமதிக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்ட 26 வயது சுவிஸ் சுற்றுலா பயணிக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமைதியான நாள் என்ற இந்து பண்டிகையின் போது அவர் விதிகளை மீறியதாலும் அதை கிண்டல் செய்யும் விதமாக சமூக வலைத்தளங்களில் போஸ்ட் பதிவிட்டதாலும் இப்போது ஓராண்டு சிறை தண்டனையை அனுபவிக்கிறார்.
தென்கிழக்கு ஆசியாவில் உள்ள முக்கியமான தீவு நாடு இந்தோனேசியா. முஸ்லீம் பெரும்பான்மையாக உள்ள இந்தோனேசியாவில் பாலி தீவு மட்டும் இந்துக்கள் அதிகம் உள்ள தீவாகும். அங்கு இந்து கலாச்சாரம் கடுமையாக பின்பற்றப்படும். அதை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படும். அப்படியொரு சம்பவம் தான் இப்போது இந்தோனேசியாவின் பாலி தீவில் நடந்துள்ளது.

வெளிநாட்டு சுற்றுலா பயணி
சுவிட்சர்லாந்தை சேர்ந்த கட்டுமான தொழிலாளியான லுசியான் ஆண்ட்ரின் ஸ்க்ராகன், அவர் சமீபத்தில் இந்தோனேசியா நாட்டில் உள்ள பாலி தீவுக்கு சுற்றுலாவுக்கு சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற நியேபி எனப்படும் ‘அமைதியின் நாள்’ சடங்கின்போது கடற்கரைக்கு சென்றுள்ளார். அங்கு யாரும் இல்லாததை வீடியோவாக பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நக்கல்
அந்த வீடியோவில் அவர், “நான் கடற்கரைக்கு சென்றேன். அவர்கள் என்ன பிடிக்கவில்லை. இங்கு முழுமையாக இருட்டாக இருந்ததால் என்னை விட்டுவிட்டார்கள் போல!” என்று அவர் கூறியிருந்தார். மேலும், நியேபி தினத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீறி தான் கடற்கரைக்குச் சென்றதையும் அவர் வீடியோவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதை தொடர்ந்து பாலி மக்களிடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. இதையடுத்து லுசியான் ஆண்ட்ரின் கைது செய்யப்பட்டார்.
நியேபி
நியேபி என்பது பாலி மக்களால் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படும் முக்கியமான இந்து பண்டிகையாகும். இதற்கு “அமைதியின் நாள்” என்று பொருளாகும். அன்றைய தினம் மக்கள் அமைதியாக இருப்பார்கள். உண்ணாவிரதம் மற்றும் தியானத்தில் ஈடுபடுகின்றனர். நியேபி தினத்தின்போது பாலி தீவே முழுமையாக முடங்கும். மக்கள் 24 மணி நேரம் வீடுகளுக்குள் இருக்க வேண்டும்.
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் நியேபி நாளில் யாரும் வெளியே செல்லக்கூடாது. இந்த கட்டுப்பாடுகள் பாலியில் வசிக்கும் இந்து மக்களுக்கு மட்டுமின்றி, அனைத்து மதத்தை சேர்ந்தவர்களுக்கும் பொருந்தும். குறிப்பாக சுற்றுலா பயணிகளுக்கும் கூட பொருந்தும். அன்றைய தினம் இணைய சேவையும் கூட கட்டுப்படுத்தப்படும். விமான நிலையம் மூடப்படும். மின்சாரத்தை பயன்படுத்துவதற்கும் கூட தடை விதிக்கப்படும்.
ஓராண்டு சிறை
ஆனால், இந்த கட்டுப்பாடுகளை எல்லாம் மீறும் வகையில் லுசியான் கடற்கரைக்கு போய் இருக்கிறார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சுவிட்சர்லாந்து நாட்டின் சுற்றுலா பயணி லுசியான் பாலி மக்களை புண்படுத்தியதாகவும் பாலி மக்களின் நம்பிக்கையை அவமதித்து பொதுமக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியதாகக் கூறினார்.
தன் செயலுக்காக வருத்தம் தெரிவித்த லூசியன், நியேபி தினத்தின் கட்டுப்பாடுகளின் தீவிரத்தை தான் புரிந்து கொள்ளவில்லை என்றும் பாலி மக்களையோ அவர்களின் சடங்குகளையோ அவமதிக்கும் நோக்கம் தனக்கு இல்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். அவர் மேலும், “நான் செய்ததற்காக மிகவும் வருந்துகிறேன். பாலி மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் கூறினார். இருப்பினும், அதை ஏற்க மறுத்த நீதிபதி அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர்.
மக்கள் வேதனை
நியேபி காலத்தில் பாலி அதிகாரிகள் இந்த கடுமையான கலாச்சார விதிகளை கடுமையாக அமல்படுத்துகின்றனர். விதிகளை மீறும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கைது, அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளை எதிர்ப்பார்கள். இது மட்டுமின்றி நாடு கடத்தல் நடவடிக்கையை கூட எடுப்பார்கள். பாலியில் சர்வதேச சுற்றுலா பயணிகளின் வருகை 70 லட்சம் என்ற சாதனையை தொட்டுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளின் தவறான நடத்தை தொடர்பான சம்பவங்களும் அதிகரித்து வருவதாக பாலி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


