அதே கோபம்.. ஜெயலலிதா பாணியை கையில் எடுத்த முதல்வர் விஜய்! கவனிச்சீங்களா? திமுகவிற்கு அடி! | Is Vijay following the footsteps of Jayalalitha in his actions against DMK

Spread the love

Tamilnadu

oi-Shyamsundar I

சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு கொஞ்சம் ஜெயலலிதா ஸ்டைல் ஆட்சி முறையை, நடவடிக்கைகளை கையில் எடுக்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. விஜய் மேற்கொள்ளும் கைது நடவடிக்கைகள், அவரது ஆக்சன்கள் இந்த விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டே மாதங்களில், தவெக தலைவர் மற்றும் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.

Jayalalitha

பொதுவாக ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் போது.. அவர் எதை வேண்டுமானாலும் மன்னிப்பார்.. ஆனால் தன்னை விமர்சனம் செய்பவர்களை மன்னிக்கவே மாட்டார். என்னையே விமர்சனம் செய்கிறாயா என்ற ஈகோ, கோபம் அவருக்கு இருக்கும். பல கார்ட்டூன்களுக்காக கூட ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கைது நடவடிக்கைகள் அரங்கேறி உள்ளன.

முக்கியமாக இரவு நேரங்களில் அப்போதெல்லாம் திடீரென பெரிய கைது நடவடிக்கைகள் அரங்கேறும். அதே ஜெயலலிதா ஸ்டைல் அரசியலை விஜய் கையில் எடுத்துள்ளார் என்று அரசியல் விமர்சகர்கள் தற்போது விமர்சனங்களை வைக்கின்றனர். தன்னை விமர்சிப்பவர்களை நள்ளிரவிலும், தப்பியோட நினைப்பவர்களை தேடித்தேடியும் கைது செய்யும் போக்கை விஜய் கையில் எடுத்துள்ளார்.

90-களில் ஜெயலலிதா முன்னெடுத்த அசுர வேக அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை பொதுமக்களுக்கு நினைவுபடுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அனிதா ராதாகிருஷ்ணன் கைது

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசினார் என்ற புகாரின் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ-வும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சென்னை உயர் நீதிமன்றம் அவரது முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த அடுத்த சில மணி நேரங்களிலேயே, ஆத்தூர் போலீசார் அவரை அதிரடியாகக் கைது செய்தனர்.

சுமார் 5 மணி நேர தீவிர விசாரணை, மருத்துவப் பரிசோதனை என நள்ளிரவு 10:30 மணியளவில் திருச்செந்தூர் நடுவர் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். ஆனால், போலீசாரின் நீதிமன்றக் காவல் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, அனிதா ராதாகிருஷ்ணனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். சிறையில் அடைக்க நினைத்த போலீசாரின் திட்டம் அன்றைய இரவே தவிடுபொடியானது. மேலும், காவலில் இருந்தபோது தன்னை திமுகவிலிருந்து விலகி தவெகவில் இணையுமாறு போலீசார் வற்புறுத்தியதாக அனிதா ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளது தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

பொதுவாக அவதூறு வழக்கில் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது. ஆனால் விஜய் அதற்கும் கூட கைது செய்யும் புதிய அரசியலை கையில் எடுத்துள்ளார்.

Gen Z விங் மீதான ஒடுக்குமுறை

அரசியல் தலைவர்கள் மட்டுமன்றி, சமூக ஊடகங்களில் தவெக அரசை விமர்சிக்கும் திமுகவின் இளம் தலைமுறையினர் மீதும் போலீசார் பாய்ந்துள்ளனர். முதல்வர் விஜய் மற்றும் அவரது குடும்பத்தினரைத் தாக்கி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டதாக, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த திமுக Gen Z பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஏ. அன்பானந்தம் மீது தவெகவினர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நள்ளிரவில் அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையும், கைது முயற்சிகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

ஸ்டாலின் அட்டாக்

இந்த அடுத்தடுத்த கைது நடவடிக்கைகளைக் கண்டித்துள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், “முதல்வர் விஜய் தமிழ்நாட்டில் ஒரு சினிமா பாணி போலீஸ் ராஜ்ஜியத்தை நடத்தி வருகிறார். மக்கள் பணிகளைச் செய்யும் ஒரு மக்கள் பிரதிநிதியை இவ்வளவு அவசரமாகக் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? இதே வேகம் ஆளுங்கட்சி மீது வரும் புகார்களில் ஏன் காட்டப்படுவதில்லை?” என சாடியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும், “இது ஒரு ரீல்ஸ் அரசாங்கம், விமர்சனங்களைத் தாங்க முடியாமல் நடுங்குகிறது” என்று விமர்சித்துள்ளார்.

ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் நள்ளிரவு கைதுகளும், அவதூறு வழக்குகளும் எப்படி அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டதோ, அதே பாணியை முதல்வர் விஜயும் கையில் எடுத்துள்ளதாகவே தற்போதைய சூழல் காட்டுகிறது. ஆனால், பழிவாங்கும் நோக்கில் பாயும் போலீசாரின் வழக்குகளை நீதிமன்றங்கள் அடுத்தடுத்து தள்ளுபடி செய்வதும், குவாஷ் செய்வதும் தவெக அரசுக்கு ஆரம்பத்திலேயே பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *