Sports
oi-Yogeshwaran Moorthi
பிலடெல்பியா: ஃபிஃபா உலகக்கோப்பைத் தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பிரான்ஸ் கேப்டன் கிலியன் எம்பாப்பே மற்றும் பராகுவே கோல்கீப்பர் ஒர்லாண்டோ கில் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கில்லிடம் கைகுலுக்காமல் எம்பாப்பே கடந்து சென்றதும், அதற்கு கில் பந்தை கொண்டு எம்பாப்பே மீது எறிந்த காட்சிகள் பேசுபொருளாகி இருக்கின்றன.
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பிரான்ஸ் அணியை எதிர்த்து பராகுவே அணி களமிறங்கியது. பராகுவே அணி எப்போதும் மைதானத்தில் கடுமையாக நடந்து கொள்ளும் என்பதால், எம்பாப்வே அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கடுமையாக முயற்சித்தும், கோல் எதுவும் அடிக்கப்படவில்லை.

ஆனால் ஆட்டத்தின் 70வது நிமிடத்தில் டெசிரே டூயே ஃபவுல் செய்யப்பட்டதால், பிரான்ஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனை சரியாகப் பயன்படுத்திய கிலியன் எம்பாப்பே, அசத்தலாக ஒரு கோல் அடித்து பிரான்ஸை 1-0 என முன்னிலைப்படுத்தினார். உலகக்கோப்பை வரலாற்றில் எம்பாப்பேயின் 19-வது கோல் இதுவாகும். இந்த ஒற்றை கோல் மூலம் பிரான்ஸ் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டம் முடிந்து பிரான்ஸ் ரசிகர்கள் மற்றும் வீரர்களுடன் எம்பாப்பே வெற்றியை ஆக்ரோஷமாக கத்தி கொண்டாடி கொண்டிருந்தார். அப்போது அருகில் நின்றிருந்த பராகுவே அணியின் கோல்கீப்பர் ஒர்லாண்டோ கில், பிரான்ஸ் கேப்டன் எம்பாப்பேயை நோக்கி கை குலுக்க தனது கையை நீட்டினார். ஆனால் எம்பாப்பே, அந்த கோல்கீப்பர் அங்கே நிற்பதைக் கூட கண்டு கொள்ளவில்லை.
உருகுவே கோல்கீப்பர் கில்லை முழுமையாகப் புறக்கணித்துவிட்டு கடந்து சென்றார். இதனால் அவமதிப்பை உணர்ந்த கோல்கீப்பர் ஒர்லாண்டோ கில் ஆத்திரத்தில் தன்னிடம் இருந்த கால்பந்தை, எம்பாப்பேயின் முதுகை நோக்கி எறிந்து கோபத்தை வெளிப்படுத்தினார். இதனை எம்பாப்பே கண்டுகொள்ளவில்லை. ஆனால் மைதானத்தில் இரு அணி வீரர்களுக்கும் உரசலும் மோதலும் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் நடுவர்கள் மற்றும் சக வீரர்கள் இரு தரப்பையும் சமாதானம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்தப் போட்டிக்குப் பின் பராகுவே அணியின் முரட்டுத்தனமான ஆட்டத்தைக் கிண்டல் செய்த எம்பாப்பே, “நாங்கள் மைதானத்திற்கு கோட் சூட் அணிந்து கொண்டு சொகுசாக விளையாட வருவோம் என்று நினைத்தார்கள் போல. எங்களால் அழுக்கான, முரட்டுத்தனமான கால்பந்தையும் விளையாட முடியும் என்பதை நிரூபித்துள்ளோம்.
அந்த பாணியிலும் நாங்கள் அவர்களை விட சிறந்தவர்களாகவே இருந்தோம் என்று தெரிவித்தார். இச்சம்பவம் குறித்துப் பேசிய பராகுவே கோல்கீப்பர் ஒர்லாண்டோ கில், நான் அவரைப் பாராட்டத்தான் கையை நீட்டினேன். ஆனால் அவர் நான் அங்கே இல்லாதது போலவே என்னைக் கடந்து சென்றார். அந்தத் தோல்வியின் ஏமாற்றத்தில் ஏற்பட்ட கோபத்தில்தான் பந்தைத் தூக்கி அடித்தேன் என்று விளக்கமளித்துள்ளார்.