தமிழக சட்டப்பேரவையில் இன்று நிதிநிலை அறிக்கை, நீர்வளம், ஊரக வளர்ச்சி, சுற்றுலாத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சட்டமன்ற விவாதத்தின்போதுபேசிய பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி, “நம் கண்முன்னாடியே ஒரு சொத்து வீணாகிக்கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது நீர்வளம்தான்.
எத்தனையோ ஏரிகள், ஆறுகள், குளங்கள் காணாமல் போய்விட்டன. ஆனால் இயற்கை கொடுத்த வளத்தை நாம் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். உலகத்திலேயே இருக்கக்கூடிய அதிசயங்கள் நம் தமிழ்நாட்டில் இருக்கிறது.

உலகிலேயே தன்னூத்து (நிலத்திற்கு அடியில் சுரக்கக்கூடிய நீர்) இரண்டே இடங்களில்தாம் இருக்கிறதாம். ஒன்று ஆஸ்திரேலியாவில் இருக்கிறது.
இன்னொன்று நம்முடைய ஊர் நெய்வேலியில் இருந்திருக்கிறது. ஆனால் இன்று அங்கு தன்னூத்து இல்லை. ஏனென்றால் லிக்னைட் கார்பொரேஷன் மூலமாக தண்ணீர் முழுவதும் உறிஞ்சப்பட்டிருக்கிறது.
அதேபோல இன்னொரு அதிசயம் சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலம். இந்தியாவில் எந்த நகரத்திலும் சதுப்பு நிலம் கிடையாது. இந்தச் சதுப்பு நிலம் சரியாக இருந்தால் எவ்வளவு மழை பெய்தாலும் தண்ணீரை இந்த நிலங்கள் உறிஞ்சிவிடும்.
மற்றொரு அதிசயம் கூவம். 72 கிலோ மீட்டர் இந்த ஆறு ஓடுகிறது. திருவள்ளூரில் உள்ள கூவம் என்ற ஊரில் இருந்து அது தொடங்குகிறது. அங்கு இந்தத் தண்ணீரை இன்றும் குடிக்கிறார்கள். கோயிலுக்கு அந்தத் தண்ணீரில்தான் அபிஷேகம் செய்கிறார்கள். விவசாயத்திற்கும் பயன்படுத்துகிறார்கள்.

ஆனால் அந்தக் கூவம் எப்போது சென்னைக்கு வருகிறதோ ரசாயனக் கழிவு, நம்முடைய சாக்கடை கழிவு, திடக்கழிவு எல்லாம் கலந்து சாக்கடை மாதிரி மாறிவிட்டது. கூவம் ஆற்றைத் தூய்மைப்படுத்துவோம் என்று அதற்காக நிதியை நீங்கள் (தவெக) ஒதுக்கி இருக்கிறீர்கள். அதை நீங்கள் தூய்மைப்படுத்தினால் மட்டும் போதாது. முதலில் கூவத்தில் கொட்டும் குப்பையைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம், அத்திக்கடவு அவினாசி திட்டத்தின் 2வது கட்டம், நொய்யல் மற்றும் தாமிரபரணி நதிநீர் இணைப்புப் பணிகள், பாலாறு தடுப்பணை மற்றும் நந்தன் கால்வாய் திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.