தனது விளையாட்டு செலவுகளுக்காக முடிந்தவரை தானே சம்பாதித்ததாகவும், தேவைப்பட்டால் கடன் வாங்கிக்கூட போட்டிகளில் பங்கேற்றதாகவும் அவர் கூறுகிறார். “எனக்கான செலவுகளை நானே பார்த்துப்பேன். முடியலன்னா கடன் வாங்கியாவது சமாளிச்சிருக்கேன். என்னோட அண்ணனும் பளுதூக்குதல் போட்டிகளில் விளையாடியவர். இப்போ முழுமையாக எனக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருக்கார். கடந்த எட்டு வருடங்களாக ஒரு தனியார் நிறுவனத்தின் ஊக்கத்தொகையால்தான் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்க முடிஞ்சது,” என்கிறார்.
காயங்களையும், பொருளாதார சவால்களையும் கடந்து ராஜா முத்துப்பாண்டி இந்த நிலையை அடைந்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கடுமையான முழங்கை காயத்தால் அறுவை சிகிச்சை செய்து நீண்ட காலம் போட்டிகளில் இருந்து விலகியிருந்தாலும், மனம் தளராமல் மீண்டும் பயிற்சிக்கு திரும்பி தேசிய மற்றும் சர்வதேச அரங்குகளில் தனது திறமையை நிரூபித்தார்.
கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் ஆடவர் 65 கிலோ பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றது அவரது வாழ்க்கையின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாக இருந்தாலும், அதில் முழுமையான திருப்தி இல்லை என்கிறார்.
“வெள்ளி பதக்கம் வாங்குனது சந்தோஷம்தான். ஆனா தங்கத்தை தவற விட்டுட்டோம்னு இன்னும் வருத்தமா இருக்கு. அந்த வருத்தம்தான் என்னை இன்னும் கடினமா உழைக்க வைக்குது,” என்று உறுதியுடன் கூறுகிறார்.
இப்போது அவரது முழு கவனமும் ஒலிம்பிக்கில்தான். “இந்தியாவுக்காக ஒலிம்பிக் பதக்கம் வாங்கணும்னுதான் என்னோட பெரிய கனவு. அதுக்கான பயிற்சியை இப்பவே ஆரம்பிச்சுட்டேன். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ்ல நடக்குற அடுத்த ஒலிம்பிக் தகுதிப் போட்டிகள் அக்டோபர்ல தொடங்குது. எனக்கு சில காயங்கள் இருக்கு. அத சரி பண்ணிட்டு முழுமையாக தயாராகி தகுதிப் போட்டிகளில் வெற்றி பெற்று, ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக பதக்கம் வாங்குவேன்,” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ராஜா முத்துப்பாண்டி.
தீப்பெட்டி தொழிற்சாலையில் லோடுமேனாக உழைக்கும் தந்தையின் மகன், தினக்கூலி தொழிலாளியின் குடும்பத்தில் இருந்து உலக அரங்கில் இந்தியக் கொடியை உயர்த்தி நிற்கும் வீரராக உயர்ந்திருக்கிறார். காமன்வெல்த் வெள்ளிப் பதக்கம் அவரது பயணத்தின் முடிவல்ல; இந்தியாவுக்கு ஒலிம்பிக் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற அவரது கனவை நோக்கிய அடுத்த கட்டத்தின் தொடக்கம்தான்.!