திருவனந்தபுரத்தில் தனது வீட்டில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனைக்குப் பிறகு பினராயி விஜயன் வீட்டுக்கு வெளியே வந்து அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் பேசினார். பினராயி விஜயன் பேசுகையில், ”அனைவருக்கும் தெரிந்தபடி, இன்று காலை 7 மணிக்குத்தான் இந்த வீட்டு வாசலுக்கு அமலாக்கத் துறையினர் வந்தனர். சோதனைக்கு வந்த குழுவினர் தங்களுக்குக் கிடைத்த உத்தரவின்படிதானே வர முடியும் அதிகாரிகள் என்று வரும்போது, தங்களுக்கு மேல் உள்ளவர்கள் சொல்வதைக் கேட்க அவர்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள். வீட்டில் நுழைந்து சோதனை நடத்த வேண்டும் என்று அமலாக்கத்துறை விரும்பத் தொடங்கி நீண்ட காலம் ஆகிறது. இந்தச் சோதனை சிலருக்குப் பெரிய மனநிறைவைத் தரும் என்று தோன்றுகிறது. குறிப்பாக ராகுல் காந்திக்கு மனநிறைவை தரும். ஏனெனில், “ஏன் பினராயி விஜயன் வீட்டில் சோதனை நடத்தவில்லை, ஏன் பினராயி விஜயனை கைது செய்யவில்லை?’ என ராகுல் காந்தி தொடர்ந்து கேள்வி கேட்டு வந்தார்.

எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு எதிராகத் திட்டமிட்ட அச்சுறுத்தல் நடவடிக்கைகளை பா.ஜ.க தொடர்ந்து வருகிறது. அதற்கு எதிராக நாடு தழுவிய அளவில் வலுவான எதிர்ப்புகள் எழுந்துள்ளன. ஆனால், தங்களது கட்சியைச் சேராத மற்றவர்களுக்கு எதிராக அமலாக்கத்துறையின் அத்துமீறல்கள் நடந்தால் நடக்கட்டும் என்ற சுயநல நிலைப்பாட்டையே காங்கிரஸ் எடுத்துள்ளது. எது எப்படியாக இருந்தாலும், இதோடு நாங்கள் முடிந்துபோகப் போவதில்லை. இதை ஒரு தொடக்கமாக மட்டுமே நாங்கள் பார்க்கிறோம். இதைக் கொண்டு எங்களைச் சோர்வடையச் செய்துவிடலாம் என்று யாரும் வீணாக நினைக்க வேண்டாம்.