International
oi-Velmurugan P
லண்டன்: வியட்நாம், தொடங்கி ஆப்கானிஸ்தான், ஈராக், உக்ரைன், ஈரான் என அமெரிக்கா புடுங்கியது எல்லாமே தேவையில்லாத ஆணி தான் என்கிறார்கள் சர்வதேச அரசியல் நிபுணர்கள். அவர்கள் அப்படி சொன்னத்திற்கு பின்னால் காரணங்களும் உள்ளது. ஏனெனில் அமெரிக்கா புகுந்து கைவைத்த இந்த நாடுகள் எல்லாமே இப்போது உள்நாட்டு குழப்பத்திலும், வறுமையிலும் உள்ளன. அமெரிக்கா செய்தது தவறு என்று பொத்தாம் பொதுவாக கூறிவிட முடியாது. ஆனால் உலக வல்லரசானா அமெரிக்காவே நினைத்தாலும் அங்கு பிரச்சனையை தீர்த்து அமைதியை ஏற்படுத்த முடியவில்லை என்பதே கசப்பான உண்மை. வாருங்கள் விரிவாக பார்ப்போம்.
வியட்நாம் 1955 – 1975
அமெரிக்கா வல்லரசாக உலகின் நாட்டாமையாக வலம் வர தொடங்கிய காலத்தில் அவர்களின் கண்ணை உறுத்திய நாடு வியட்நாம் தான். வியட்நாமில் கம்யூனிசம் வேகமாக பரவியது. இதனால் கோபம் அடைந்த அமெரிக்கா, ஜனநாயகத்தைக் காப்பாற்றி தருகிறாம் என்று கூறி 1960-களில் களம் இறங்கியது. கையோடு மோசமான ரசாயன ஆயுதங்களையும், குண்டுகளையும், தென்காசி போன்று பச்சை பசேல் என்று இருந்த குட்டி நாட்டில் கொட்டிவிட்டது. இதனால் கோபம் அடைந்த வியட்நாம் மக்கள் கொரில்லா போர் முறையை பயன்படுத்தி அமெரிக்காவை விரட்டினார்கள். அங்கு லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். அமெரிக்கா வீசிய ரசாயனக் குண்டுகளால் இன்று வரை குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகிறது.

ஈராக் (2003)
அமெரிக்கா கடந்த 2003ம் ஆண்டு ஈராக்கிடம் உலகையே அழிக்கும் பேரழிவு ஆயுதங்கள் உள்ளதாக கூறியது. அந்நாட்டு அதிபர் சதாம் உசேனை தூக்கிலிட்டது. ஆனால் ஈராக்கில் எந்த ஒரு பேரழிவு ஆயுதமும் இல்லை.. அமெரிக்கா கண்டுபிடிக்கவே இல்லையே.மாறாக போர் காரணமாக அங்கு நிலைமை மோசமாகியது. கடைசியாக ஐஎஸ்ஐஎஸ் போன்ற அமைப்புகள் உருவாகியது. இன்னும் அங்கு நிலைமை மோசமாகவே இருக்கிறது. அமைதியான நாடாக இல்லை.
லிபியா (2011)
லிபியாவை பொறுத்தவரை அமெரிக்கா சொன்ன காரணம் அதிபர் கடாபி தன்னுடைய சொந்த நாட்டு மக்களைக் கொடுமைப்படுத்தி சர்வாதிகாரம் செய்கிறார். ஜனநாயகம் மலர வைக்கிறோம் என்று இறங்கியது. ஆனால் கடாபி ஆட்சியில் லிபியா மக்களுக்கு இலவச மருத்துவம், இலவசக் கல்வி, சொந்த வீடு இருந்ததாக சொல்கிறார்கள். இறுதியில் கடாபியைக் கொன்றுவிட்டு அமெரிக்கா வெளியேறிவிட்டது. அதன்பின்னர் ஜனநாயகம் மலரவே இல்லை. லிபியா நாட்டில் பல குழுக்கள் வளர்ந்து, உள்நாட்டுப் போரில் சிக்கிக்கொண்டது. வறுமையில் தவிக்கிறது.
சிரியா (2011 )
சிரியா அதிபர் பஷர் அல்-அசாத் ஆட்சியை அமெரிக்காவிற்கு பிடிக்கவில்லை. எனவே அங்கு போராடி வந்த ‘மிதவாதக் கிளர்ச்சியாளர்களுக்கு’ ஆயுத உதவி செய்தது. அப்படி அமெரிக்கா கொடுத்த ஆயுதங்கள் பல தீவிரவாதக் குழுக்களுக்கு போனது. இதனால் சிரியாவிற்கு ஆதரவாக ரஷ்யா போரிட்டது. இறுதியாக ரஷ்யா, ஈரான், அமெரிக்கா உள்பட பல நாடுகள் சேர்ந்து சிரியாவை காலி செய்தார்கள். அங்கும் உள்நாட்டு குழப்பமே நீடிக்கிறது. மக்களில் பலர் அகதிகாக ஐரோப்பா பக்கம் போய்விட்டார்கள்
ஆப்கானிஸ்தான் 2001 -2021
2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்காவின் இரட்டைக்கோபுரம் தாக்குதலால் கோபம் அடைந்த அமெரிக்கா, ஒசாமா பின் லேடனை ஒழிப்பதற்காக ஆப்கானிஸ்தான் கிளம்பியது. அங்குஅவருக்கு அடைக்கலம் கொடுத்த தலிபான்களை அழிக்க களம் இறங்கியது. மேலும் ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு சுதந்திரம் இல்லை.. அந்த நாட்டில் ஜனநாயகமும் இல்லை.. எனவே போரிட்டு வாங்கி தருகிறோம் என்று கிளம்பியது. சொன்னபடியே ஆப்கானிஸ்தானில் பின்லேடனை போட்டு தள்ளியது. தலிபான்களை விரட்டிவிட்டு, ஒரு ‘பொம்மை அரசாங்கத்தை’ உட்கார வைத்தது. ஆனால் அமெரிக்க ராணுவம் நடத்திய போரால் ஆப்கானிஸ்தான் மக்களின் வாழ்வாதாரம் இன்னும் மோசமாகியது. அமெரிக்காவின் ஆயுத நிறுவனங்களே சம்பாதித்தன. லட்சம் கோடிகளை கொட்டியும், பல அமெரிக்க வீரர்களையும் இழந்த அமெரிக்கா, ஒரு கட்டத்தில் போதும்டா சாமி, எங்களுக்கு உங்கள் நாட்டில் என்ன வேலை என்று கிளம்பியது. 2021 ஆகஸ்ட் மாதம் அமெரிக்க ராணுவம் காபூல் விமான நிலையத்திலிருந்து நள்ளிரவில் அவசர அவசரமாக வெளியேறிவிட்டது. அதன்பிறகு தாலிபான்கள் தான் ஆட்சி செய்து வருகிறார்கள்.
ஈரான் (2026)
இஸ்ரேலுக்காக சண்டை போட போன அமெரிக்கா, ஈரான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் குண்டு போட்டது. ராணுவ கட்டமைப்புகளை குறிவைத்து நடத்திய தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளனர். ஈரானும் பதிலுக்கு நடத்திய தாக்குதல் மற்றும் முடிவால் உலகின் முக்கியமான பொருளாதார பாதையான ஹார்முஸ் நீரிணை முடங்கி உள்ளது. என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்தே இனி பார்க்க வேண்டும்.
இறுதியாக சர்வதேச அரசியல் நிபுணர்கள் கூறுவது என்னவென்றால், அமெரிக்காவில் உள்ள ஆயுதத் தயாரிப்பு நிறுவனங்களுக்குப் லாபம் கிடைக்க உலகத்தில் எங்காவது போர் நடக்க வைப்பதாக குற்றம்சாட்டுகிறார்கள். அதேபோல் உலக நாடுகள் கச்சா எண்ணெயைத் டாலரை வைத்துத்தான் வர்த்தகம் செய்ய வேண்டும் என்ற விதியை கொண்டு வந்த அமெரிக்கா, அதனை எதிர்ப்பவர்களை எல்லாம் காலி செய்தது. இதனால் அந்த நாடுகள் எல்லாம் இன்று அல்லல் படுகின்றன.

