அமெரிக்கா சொல்வதை எல்லாம் கேட்க முடியாது.. ஹார்முஸ் விவகாரத்தில் முஷ்டியை முறுக்கும் ஈரான்! பதற்றம் | Iran Sets New Conditions to Reopen Strait of Hormuz Amid Rising Tensions, What is happening

Spread the love

International

oi-Vigneshkumar

தெஹ்ரான்: ஹார்முஸை சுற்றிலும் பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதற்கிடையே ஹார்முஸை திறக்க வேண்டும் என்றால் அமெரிக்கா தனது நடவடிக்கைகளை மாற்றி கொள்ள வேண்டும் என்று ஈரான் புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது. உலக எரிபொருள் வர்த்தகத்தில் கணிசமான பங்கு ஹார்முஸை சுற்றி நடக்கும் நிலையில், ஈரானின் இந்த கருத்து பதற்றத்தை அதிகரிப்பதாகவே இருக்கிறது.

வளைகுடாவில் அமெரிக்கா ஈரான் நாடுகள் நேரடியாக தாக்குதல் நடத்துவதை நிறுத்தியுள்ளன. ஆனாலும், அங்கு போர் நிறுத்தம் முழுமையாக அமலுக்கு வந்துவிட்டது என சொல்ல முடியாது. அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. சர்வதேச எரிசக்தி வர்த்தகத்தில் ஹார்முஸ் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், அதை சுற்றிலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Iran US hormuz

ஈரான்

இதற்கிடையே ஹார்முஸை திறக்க சில புதிய நிபந்தனைகளை ஈரான் விதித்துள்ளது. இது தொடர்பாக ஈரான் பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில், “அமெரிக்கா தனது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். அதை அவர்கள் செய்யாத வரை ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கவுன்சிலின் செயலாளரும், ஈரானின் புரட்சிகர காவல்படையின் தளபதியுமான முகமது பகர் சோல்கத்ர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

ஈரானின் புதிய நிபந்தனைகள் என்ன?

அமெரிக்கா இனி ஈரானை ஒருபோதும் அச்சுறுத்தக்கூடாது என்றும் ஈரான் மற்றும் ஹவுதி உள்ளிட்ட அதன் பிராந்திய குழுக்களுக்கு எதிரான போரை நிரந்தரமாக நிறுத்த வேண்டும் என்பதே ஈரானின் முதல் நிபந்தனை. மேலும், ஈரான் துறைமுகங்களை அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டு முடக்கியுள்ள நிலையில், அதை திரும்ப பெற வேண்டும் என்றும் வளைகுடாவில் இருக்கும் அமெரிக்க படைகள் மொத்தமாக வாபஸ் பெறப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு ஈரானுக்கு முழுமையான இழப்பீடு வழங்க வேண்டும்… பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும்.. முடக்கப்பட்டுள்ள ஈரானின் சொத்துகளை எந்த நிபந்தனையும் இன்றி விடுவிக்க வேண்டும் என்பதும் ஈரானின் கோரிக்கைகளில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக இதுவரை அமெரிக்கா எந்தவொரு பதிலையும் தரவில்லை.

ஹார்முஸ் ஏன் முக்கியம்?

ஈரானுக்கும் ஓமானுக்கும் இடையே அமைந்துள்ள ஹார்முஸ் ஜலசந்தி, உலகின் முக்கியமான கடல் வர்த்தக பாதைகளில் ஒன்றாகும். குறிப்பாக வளைகுடா நாடுகளின் எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதிக்கு இந்த கடல்வழி மிக முக்கியமானதாக உள்ளது. உலகின் ஒட்டுமொத்த எண்ணெய் வர்த்தகத்தில் சுமார் 20% இந்த ஜலசந்தி வழியாகவே நடக்கிறது. இந்த ஜலசந்தியை நிர்வகிப்பது தொடர்பாக ஈரானும் ஓமானும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அந்த பேச்சுவார்த்தையில் எடுக்கப்படும் முடிவும் கூட முக்கியமானதாக இருக்கும்.

இதற்கிடையே ஹார்முஸ் வழியாக சென்ற அபுதாபி அரசுக்கு சொந்தமான ADNOC நிறுவனத்தின் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. ஈரான் வர்த்தக கப்பல்கள் மீது தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதாகவும் அதன் ஒரு பகுதியாக இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக அமீரக வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. ஈரானின் இந்த தாக்குதலில் நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

ஏமன் மோதல்

மறுபுறம் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக ஏமன் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. ஹவுதிகள் சமீபத்தில் ஏமனின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் தாக்குதல் நடத்தியிருந்தனர். அதற்கு பதிலடியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஏமன் ராணுவம் தெரிவித்துள்ளது. இதனால் ஏமனில் கிளர்சி செய்யும் ஹவுதிகளுக்கும், அங்குள்ள ஏமன் அரசுக்கும் இடையிலான மோதல் மீண்டும் தீவிரமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நிலைமை மோசமாக இருக்கும் சூழலில், 2022ல் ஏற்பட்ட போர்நிறுத்தம் முடிவுக்கு வரும் என அஞ்சப்படுகிறது. ஏமனில் மீண்டும் பெரிய அளவிலான உள்நாட்டு போர் உருவாகக்கூடும் என்று ஐ.நா. சிறப்பு தூதர் ஹான்ஸ் கிருண்ட்பெர்க் எச்சரித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *