அம்மாபேட்டை: பூங்காவில் அடைக்கலமாகும் ஆயிரக்கணக்கான வௌவால்கள் – கவனம் ஈர்க்கும் `Batman' Park!

Spread the love

சேலம் மாவட்டம், அம்மாபேட்டையில் உள்ள அய்யாசாமி பூங்கா, வௌவால்கள் அதிக அளவில் வசிப்பதால் `பேட்மேன் பார்க்’ என மக்களால் அழைக்கப்படுகிறது.

பூங்காவின் வரலாறு

இந்தப் பூங்கா 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, தற்போது வரை மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் சிறப்பாகவும் தூய்மையாகவும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

பூங்காவின் சிறப்பம்சம்

இந்தப் பூங்காவின் தனித்துவம் என்னவென்றால், தினமும் ஆயிரக்கணக்கான வௌவால்கள் இதைப் புகலிடமாகக் கொண்டு சுதந்திரமாக வாழ்ந்து வருகின்றன. மாலை நேரங்களில் சாரை சாரையாக வேட்டைக்குப் புறப்படும் அவை, மீண்டும் காலை நேரத்தில் வந்து அடைக்கலமாகின்றன.

இந்தப் பூங்காவில் பெரும்பாலும் புளிய மரங்கள் நிறைந்துள்ளன. இப்பூங்காவைச் சுற்றிய பகுதிகளில் வேறு மரங்கள் இருந்தாலும், இந்த வௌவால்கள் பூங்கா அமைப்பை விட்டு வெளியே எந்த மரங்களிலும் அமர்வதில்லை என்று அந்த ஊர் பொதுமக்கள் கூறுகின்றனர்.

இந்தப் பூங்காவை திறப்பதற்கு முன்பாகவே இந்த இடம் வௌவால்களால் மட்டுமே நிரம்பியிருந்தது. அதைக் கருத்தில் கொண்டே இந்தப் பூங்கா தொடங்கப்பட்டது. மேலும், இப்பூங்காவில் 50-க்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகளை வளர்த்துப் பராமரித்து வருகின்றனர்.

பொதுமக்களின் கருத்து

உடற்பயிற்சி செய்ய வரும் மக்களும், விளையாட வரும் குழந்தைகளும் மாலை நேரங்களில் படையெடுத்துப் பறக்கும் பேட்மேன் காட்சிகளைக் கண்டு மகிழ்ச்சி கொள்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல், இந்தப் பூங்காவிற்கு எந்தவித நுழைவுக் கட்டணமும் இல்லை. டி.என்.பி.எஸ்.சி மற்றும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள், இந்தப் பூங்காவை மன அமைதியான, தொந்தரவற்ற இடமாகக் கருதி தினமும் இங்கு அமர்ந்து தேர்வுகளுக்குத் தயாராகிறார்கள்.

கராத்தே மற்றும் குத்துச்சண்டை போன்ற போட்டிகளுக்குத் தயாராகும் குழந்தைகள் இங்கு தினமும் பயிற்சி பெறுகின்றனர். காலை, மாலை நேரங்களில் வயதானவர்களும் குழந்தைகளும் இந்தப் பூங்காவை மன அமைதி பெறும் இடமாகக் கருதுகின்றனர்.

பொதுமக்களின் பங்கு

பூங்கா மற்றும் இங்கு வாழும் வௌவால்களைப் பாதுகாக்கும் விதமாக, மக்கள் தீபாவளி மற்றும் பண்டிகை நாள்களில் இங்கு வெடிகள் வெடிப்பதைத் தவிர்த்து வருகின்றனர்.

வியப்புக்குரிய விஷயம்

வௌவால்கள் இந்தப் பூங்காவில் குறிப்பாகப் புளிய மரத்தினைத் தவிர, வெளியே அமைந்திருக்கும் எந்த மரத்திலும் அமர்வதே இல்லை. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பூங்கா என்ற அமைப்பு இல்லாத போதும், இந்த இடம் வௌவால்களுக்கு உரித்தான இடமாக விளங்கியதாக, அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *