அயோத்தி ராமர் கோயிலுக்கு வழங்கப்பட்ட நன்கொடைகள் திருடப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சையில், புதிதாக முன்னாள் மத்திய உள்துறைச் செயலாளர் எஸ்.லட்சுமிநாராயணன், தான் அயோத்தி ராமர் கோயிலுக்கு வழங்கிய 5 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் பூசப்பட்ட ராமசரிதமனஸ் பிரதி மர்மமான முறையில் காணாமல் போயுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
அயோத்தி மற்றும் பத்ரிநாத் கோயில் உண்டியல் பணத்தில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்துள்ளது. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி எஸ்.லட்சுமிநாராயணன் குடும்பம், அயோத்தி ராமர் கோயிலுக்கு ரூ.5 கோடி மதிப்புள்ள ஆன்மிகப் புத்தகத்தை நன்கொடையாக வழங்கி இருந்தார்.
இது குறித்து லட்சுமி நாராயணன் கூறுகையில், “‘தங்கம் பூசப்பட்ட புனித நூல், எங்களது ஒட்டுமொத்த குடும்பத்தினரால் கோயிலுக்குக் காணிக்கையாக வழங்கப்பட்டதாகும்.
இந்த பிரதியில் பயன்படுத்தப்பட்ட தங்கம் சாதாரண தங்கம் அல்ல. எனது மறைந்த தாயாரின் பாரம்பரிய நகைகள் அனைத்தும் உருக்கப்பட்டு, அதிலிருந்து பெறப்பட்ட தங்கத்தைக் கொண்டே இந்த புத்தகத்தின் பக்கங்களில் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. தனது குடும்பத்தினருடன் கலந்தாலோசித்த பிறகே, இந்த ராமசரிதமனஸ் பிரதியை அயோத்தி கோயிலுக்குக் காணிக்கையாக வழங்க முடிவு செய்தோம்.
புதிதாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள், இந்த புனித நூலை நேரில் பார்த்து அதன் மூலம் ஆசி பெற வேண்டும் என்பதே எங்களின் நோக்கமாக இருந்தது. தங்கம் பூசப்பட்ட இந்த விலைமதிப்பற்ற ராமசரிதமனஸ் பிரதியை ராமர் கோயிலுக்குக் காணிக்கையாக வழங்கியபோது, அதற்கான எந்தவொரு அதிகாரப்பூர்வ ரசீதும் வழங்கப்படவில்லை. உணர்வுப்பூர்வமான காணிக்கையான ராமசரிதமனஸ் புத்தகத்தை அயோத்தி அறக்கட்டளை நிர்வாகத்திடம் ஒப்படைத்தோம். அதைத் தகுந்த இடத்தில் வைக்கக் கோரி பலமுறை கடிதங்கள் அனுப்பியும் பதில் கிடைக்கவில்லை.
இந்த விவகாரம் குறித்துச் சம்பத் ராயை நேரில் சந்தித்து முறையிட்டும் திருப்தியான விளக்கம் கிடைக்கவில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார். ராமர் கோயில் உண்டியல் காணிக்கை திருட்டு வழக்கு தொடர்பாக ஏற்கெனவே தீவிர விசாரணை நடந்து வரும் வேளையில், இந்த முன்னாள் உயர் அதிகாரியின் புகார் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக இதுவரை எட்டுப் பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, காவல்துறையினரின் விசாரணையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இப்புகார் கோயில் நிர்வாகத்திற்கு மேலும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.