அய்யப்ப பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. சபரிமலை to தேனி ரயில் பாதைத் திட்டம்! டெல்லி ‘க்ரீன் சிக்னல்’ | Theni-Sabarimala Railway Survey Gets Green Signal, Bringing Hope for Ayyappa Devotees

Spread the love

Tamilnadu

oi-Rajkumar R

தேனி: தமிழகத்தில் இருந்து கேரளாவின் புகழ்பெற்ற சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பெரும்பாலும் சாலை மார்க்கமாகவே சென்று வருகின்றனர். இதனையடுத்து தேனி -சபரிமலை இடையே புதிய அகல ரயில் பாதை திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று நீண்ட நாட்கள் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் ஒரு செய்தி வெளியாகி உள்ளது. தேனி எருமேலி இடையே சுமார் 95 கிலோ மீட்டர் தொலைவில் புதிய ரயில் பாதை ஆய்வுக்கான ஒப்புதலை மத்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கேரளாவில் சபரிமலையில் குடி கொண்டிருக்கும் ஐயப்பனை தரிசனம் செய்ய இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். அதே நேரத்தில் சாலை மார்க்கமாகவே பக்தர்கள் பெரும்பாலும் சபரிமலைக்கு செல்லும் நிலை உள்ளது.

ஏற்கனவே சபரிமலையில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில் தேனி – எருமேலி இடையே ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பொதுமக்களால் நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது.

Theni Sabarimalai Railway

தேனி எருமேலி ரயில்

தமிழகத்தின் தேனி மாவட்டத்தோடு சபரிமலையின் நுழைவாயிலாக கருதப்படும் எரிமேலியை இணைக்கும் வகையில் ரயில் பாதை அமைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேனி எருமேலி ஆகியவற்றை நேரடியாக இணைக்கும் வகையில் புதிய ரயில் திட்டத்திற்கான சாத்தியக்கூறு குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக கடந்த ஆண்டு ஒப்பந்த புள்ளி வெளியிடப்பட்டது. தற்போது அந்த ஆய்வுக்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அஸ்வினி வைஷ்ணவ்

இந்த தகவலை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர் தேனி எருமேலி ரயில் பாதைக்கான ஆய்வு தொடர்பாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார். ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் புதிய ரயில் பாதை திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கப்படும் எனவும், அதன் பிறகு திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு முன்பாக பல்வேறு கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு, நிதி மற்றும் பொருளாதார ரீதியான மதிப்பீடுகளை மேற்கொள்ளப்படும் எனவும் கூறியுள்ளார்.

சபரிமலை ஐயப்பன்

மேலும் நிதி அமைச்சகம் மற்றும் நிதி ஆயோக் உள்ளிட்ட அமைப்புகளின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்பதால் தற்போது இந்த ரயில் பாதை அமைக்கும் பணிகள் தொடங்குவதற்கான காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை எனக் கூறியிருக்கிறார். சபரிமலை ஐயப்பன் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையான இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் தேனி மாவட்டத்தை கேரளாவுடன் இணைக்கும் புதிய ரயில் திட்டம் கிடைக்கும்.

சாலைப் போக்குவரத்து

ஏற்கனவே தேனி வரை அகல ரயில் பாதை திட்டம் செயல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் இந்த திட்டம் அப்பகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் என்கின்றனர். தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சபரிமலை மற்றும் பம்பைக்கு செல்ல பெரும்பாலும் சாலைப் போக்குவரத்தையே நம்பி இருக்கின்றனர். மேலும் கம்பம், குமுளி வழியாக எருமேலி மற்றும் பம்பை பகுதிக்கு சென்று வருகின்றனர்.

ரயில் திட்டம்

இந்த வழித்தடத்தில் நேரடியாக ரயில்வே பாதை இல்லாததால் சபரிமலை பக்தர்கள் மட்டும் இன்றி தேனி மாவட்ட மக்கள் கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதிலும் சிரமம் உள்ளது. தேனி எருமேலி ரயில் இணைப்பு திட்டம் உருவானால் சபரிமலை செல்லும் பக்தர்கள் பக்தர்களுக்கு வசதியான மாற்று போக்குவரத்து கிடைக்கும். மேலும் தேனி மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த ரயில் திட்டம் உதவக்கூடும்.

சபரிமலை ரயில் திட்டம்

கேரளாவுக்கு காய்கறிகள், பழங்கள், பால், இறைச்சி உள்ளிட்டவை சாலை மார்க்கமாகவே கொண்டு செல்லப்படுகிறது. தற்போது இந்த ரயில் திட்டம் அமல்படுத்தப்பட்டால் தேனி மாவட்ட மக்களுக்கு சரக்கு போக்குவரத்து எளிதாக தொடங்கும் என்கின்றனர். சபரிமலை ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டால் பக்தர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பொருளாதார ரீதியாக பயன்பெறுவார்கள். எனவே சபரிமலை ரயில் இணைப்பு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை அப்பகுதி மக்களிடையே எழுந்திருக்கிறது.

பொருளாதார வளர்ச்சி

இந்த திட்டத்திற்கு முன்னோடியாக அமைந்தது மதுரை போடிநாயக்கனூர் அகல ரயில் பாதை திட்டம் தான். சுமார் கிமீ தொலைவிலான இந்த ரயில் பாதை 593 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு நிறைவேற்றிருக்கிறது. இதன் மூலம் பல ஆண்டு இடைவெளிக்கு பிறகு தேனி மாவட்டத்திற்கு மீண்டும் ரயில் சேவை கிடைத்துள்ளது. தற்போது முன்மொழியப்பட்டுள்ள தேனி எருமேலி ரயில் பாதை செயல்பாட்டுக்கு வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். இந்த ஆய்வு வெற்றிகரமாக நிறைவடைந்து நிதி ஒப்புதல் கிடைத்து திட்டம் செயல்படுத்தப்பட்டால் தேனி மாவட்டம் மற்றும் சபரிமலை இடையிலான போக்குவரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *