கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வெள்ளிமாடுகுந்நு பகுதியில் அரசு சிறுவர் சீர்திருத்தப் பள்ளி செயல்பட்டு வருகிறது. குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிறார்கள் இந்தச் சீர்திருத்தப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு தங்கியிருந்த சிறுவர்களுக்கு இம்மாதம் தொடக்கத்தில் கவுன்சிலிங் அளிக்கப்பட்டது. அப்போது அங்கு தங்கியிருந்த 12 வயது சிறுவன் ஒருவன் தன்னை சீர்திருத்தப்பள்ளி காப்பாளர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கண்ணீருடன் தெரிவித்துள்ளான்.
சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக் காப்பாளர் பி.அயூப், தன்னை அந்தக் காப்பகத்திலேயே வைத்து பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக சிறுவன் தெரிவித்தான். கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் தன்னை அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுவன் தெரிவித்தான்.
இதையடுத்து அரசு சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக் காப்பாளராக இருந்த செலவூர் பகுதியைச் சேர்ந்த பி.அயூப் மீது போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளில் சேவாயூர் போலீஸார் ஜூன் 5-ம் தேதி வழக்குப் பதிவு செய்தனர்.

போலீஸார் வழக்குப் பதிவு செய்ததை அறிந்தவுடன் காப்பாளர் பி.அயூப் தலைமறைவானார். அவரைக் கைது செய்வதற்காக போலீஸார் தீவிரமாகத் தேடிவந்தனர்.