அருள்வான் விமர்சனம்: மலைவாழ் சிறுமியின் கல்விக்கான போராட்டம்; அருள்நிதியின் டிராமா இலக்கை அடைகிறதா?

Spread the love

தேனி மலைக்கிராமத்தில் பெற்றோருடன் வளர்கிறார் காடர் இனச் சிறுமி குறிஞ்சி (பேபி கிருத்திகா). அப்பா கந்தன் (ஆரவ்) மலையில் தேன் எடுப்பது, அம்மா அமரவள்ளி (ரம்யா பாண்டியன்) காட்டில் சுள்ளி விறகு சேகரிப்பது என வாழ்வாதாரத்திற்குக் காடு சார்ந்து இருக்கின்றனர். இந்நிலையில் அவர்கள் வாழும் மலைப்பகுதி நிலம், படிப்பறிவில்லாத ஒரே காரணத்தால் காவல் அதிகாரி பாண்டியனிடம் (ஜான் விஜய்) பறிபோகிறது. படிப்பைப் பெற்றால் நம் இனத்துக்கே முன்னேற்றத்தைக் கொண்டு வரலாம் என்ற கனவோடு, தனக்கு நடக்கவிருக்கும் குழந்தைத் திருமணத்திலிருந்து வெளியேறுகிறார் குறிஞ்சி. கீழே நகரத்தில் அவருக்கு நடக்கும் சிக்கல்கள் என்னென்ன, அவர் வேண்டிய கல்வி அவருக்குக் கிடைத்ததா என்பதற்கான விடையை டிராமாவாகச் சொல்கிறார் இயக்குநர் கணேஷ் விநாயகன்.

அருள்வான்

கதையின் நாயகியாக பேபி கிருத்திகா, தன் கதாபாத்திரத்தின் மலையளவு ஏற்ற இறக்கங்களை உணர்ந்து நெகிழ்ச்சியான நடிப்பினை வழங்கியுள்ளார். காடர் மொழி பேச அவர் எடுத்திருக்கும் முயற்சிக்கும் பாராட்டுகள். தந்தையாக ஆரவ் சண்டைக் காட்சிகளில் மட்டும் கவர்கிறார். கலங்கும் காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார் ரம்யா பாண்டியன். வில்லனாக ஜான் விஜய்யிடம் அதீத செயற்கைத்தனமே கூடி நிற்கிறது.

இரண்டாம் பாதியில் கலெக்டர் முத்துவேலாக அருள்நிதி மொத்தப் படத்தையும் தாங்கி நிற்கிறார். தெளிவான வசனங்கள், தீர்க்கமான அரசியல் பார்வை எனத் தான் வரும் காட்சிகளில் கதையை முன் நகர்த்திச் செல்கிறார். அவரின் உதவியாளராக விடிவி கணேஷ், வடிவேல் ஆகியோர் ஆங்காங்கே காமெடிக்கு உதவ, பத்திரிகையாளராக காளி வெங்கட் வேண்டிய பணியினைச் செய்திருக்கிறார்.

தேனி மலைக்கிராமத்தின் பிரமாண்ட பச்சைப் போர்வை, மேகம் உரசும் மலைமுகடு, ஆபத்தான காடு என அனைத்தையும் திரைக்கு வாரி வந்திருக்கிறது ஒளிப்பதிவாளர் எம்.சுகுமாரின் கேமரா. ஆனால், ஒரு சில டிரோன் ஷாட்களில் தரத்துக்கு இன்னும் மெனக்கெட்டிருக்கலாம். படத்தொகுப்பாளர் லாரன்ஸ் கிஷோர், எதிர்பார்ப்பில்லாமல் தெரிந்த பாதையிலேயே மலையேறும் முதல் பாதியை இன்னும் துரிதப்படுத்தியிருக்கலாம். லால்குடி இளையராஜாவின் கலை இயக்கத்தில் காடர் மலைக்கிராமம் அசலாக உயிர்பெற்றிருக்கிறது.

அருள்வான் படத்தில்…

மலைவாழ் மக்களுக்கு அடிப்படை உரிமையான கல்வியே சென்று சேராமலிருக்கும் ஆதங்கத்தை ஒரு சிறுமியின் கல்வி கனா மூலம் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் கணேஷ் விநாயகன். ஆனால், மையக்கதையை அடைய, அவர் எடுத்துக்கொள்ளும் நேரமும், வில்லனின் அட்டூழியங்களைக் காட்டும் காட்சிகளும் பெரும் அயர்ச்சியே! மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்யும் காட்சிகளை விடுத்து முதல் பாதியில் சுவாரஸ்யமான காட்சிகளை டிரோன் விட்டுத் தேட வேண்டியிருக்கிறது. சொத்தை இழக்கும் அச்சமூகத்தின் தலைவர், மக்களுக்கு காவல்துறையால் தொடரும் இன்னல்கள் என இக்காட்சிகளில் டப்பிங்கும் ஏமாற்றமளிக்கிறது. காட்சிகளைக் கோர்வையாகக் கோப்பதிலும் அத்தனை சிக்கல்கள்!

இரண்டாம் பாதியில் கலெக்டரான அருள்நிதியின் அறிமுகத்துக்குப் பிறகே படம் மைய அரசியலைத் தொடுகிறது. கலெக்டர் நல்லவர், உதவுபவர் என்றவுடன் ‘எல்லாம் சுபம்’ என்று காட்டாமல், மலைக்கிராமத்தில் கல்வியைச் சென்று சேர்ப்பது எத்தனை சவாலாக இருக்கிறது என்பதைக் காட்சிப்படுத்திய விதம் புதுசு. கலெக்டர் மற்றும் அதிகாரிகள் மலையேறும் காட்சியும், “எனக்கு மட்டும் கல்வி கிடைத்தால் போதாது. என் ஊருக்கே வேண்டும்” என்ற சிறுமியின் வசனமும் பேசப்படவேண்டிய அரசியல்! காடர் மொழிக்காக மெனக்கெட்டதும் பாரட்டுக்குரியதே! ஆனால், கருமுட்டை திருட்டு, போதை காளான் ஆகிய எபிசோடுகள் இந்தப் படத்துக்குத் தேவையில்லையே இயக்குநரே?!

அருள்வான் படத்தில்…

ஒட்டுமொத்த மேக்கிங்கும், முதல் பாதி திரைக்கதையும் இன்னும் செழுமைப்படுத்தப்பட்டிருந்தால், சொல்ல வந்த சேதியை அருள்வாக்காக வழங்கியிருப்பான் இந்த `அருள்வான்’.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *