நடிகரும் முதலமைச்சருமான விஜய் இனி திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், ‘ஜனநாயகன்’ படத்தை பிரமாண்டமாக கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். பல்வேறு திரையரங்குகளில் கட் அவுட்கள், பேனர்கள் மற்றும் போஸ்டர்களை அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பொங்கல் பண்டிகையையொட்டி இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சென்சார் தொடர்பான பிரச்னைகளால் திட்டமிட்டபடி படம் வெளியாகவில்லை. இதையடுத்து ஏற்பட்ட சட்டரீதியான முயற்சிகளும் எதிர்பார்த்த பலனை அளிக்காத நிலையில், தற்போது ஏ சான்றிதழுடன் திரைப்படம் வெளியாக உள்ளது.
இதற்கிடையே, படம் திரைக்கு வருவதற்கு முன்பே அதன் முழு பதிப்பு இணையத்தில் கசிந்ததாக தகவல்கள் வெளியாகின. சுமார் 1.2 கோடி பேர் ஆன்லைனில் படத்தை பார்த்ததாகவும் கூறப்பட்டது. பல்வேறு தடைகளை கடந்து ‘ஜனநாயகன்’ திரையரங்குகளை வந்தடைவது விஜய் ரசிகர்களிடையே உற்சாகத்தை அதிகரித்துள்ளது.
இந்த சூழலில், தவெக பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆனந்த், கட்சியின் எம்.எல்.ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். விஜய் நடித்துள்ள இறுதிப் படமான ‘ஜனநாயகன்’ வெளியீட்டை ஒரு பெரிய திருவிழாவைப் போல் கொண்டாட வேண்டும் என்றும், தங்களது பகுதிகளில் உள்ள திரையரங்குகளை சிறப்பாக அலங்கரித்து ரசிகர்களுடன் இணைந்து கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


