Cricket
oi-Yogeshwaran Moorthi
பெல்பாஸ்ட்: வைபவ் சூர்யவன்ஷியின் முகத்தை வைத்துதான் இந்தியா – அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடரை விளம்பரப்படுத்தும் பணிகளே நடந்து வருகிறது. அந்த அளவிற்கு இந்திய அணியில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பாகவே வைபவ் ரசிகர் கூட்டத்தை வைபவ் சூர்யவன்ஷி ஈர்க்க தொடங்கிவிட்ட சூழலில், இன்றைய ஆட்டத்தில் நிச்சயம் ஆடுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இன்னும் ஒரு பந்தைக் கூட எதிர்கொள்ளாத ஒரு இளம் வீரரை வைத்து, ஒட்டுமொத்த சர்வதேச டி20 தொடரே விளம்பரப்படுத்தப்படுகிறது என்றால் அது இந்திய கிரிக்கெட்டின் புதிய புயல் வைபவ் சூர்யவன்ஷி ஒருவராகத்தான் இருக்க முடியும். ஒரு வீரர் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாவதற்கு முன் இப்படியான விளம்பரங்களில் இடம்பெறுவது அரிதிலும் அரிதான விஷயம்.

இந்தியா – அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடரை விளம்பரப்படுத்தும் போஸ்டர்கள் மற்றும் புரோமோக்களில் 15 வயதான வைபவ் சூர்யவன்ஷியின் முகத்தை வைத்தே விளம்பரப் பணிகள் மிகத் தீவிரமாக நடந்து வருகின்றன. இதற்கு முன்பாக ஆஸ்திரேலியா மீடியாக்கள் பார்டர் கவாஸ்கர் டிராபியை விளம்பரப்படுத்தும் போது உலகின் சிறந்த பேட்ஸ்மேன் ஆஸ்திரேலியா வருகிறார் என்று விராட் கோலியை பயன்படுத்தியது.
இதன்பின் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து மீடியாக்கள் வைபவ் சூர்யவன்ஷிக்கு கொடுக்கும் விளம்பரங்கள் உச்சத்தில் இருக்கின்றன. வைபவ் சூர்யவன்ஷி இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய பிராண்ட் அம்பாஸடராக மாறிவிட்டார். தற்போது இவரை வைத்து அறுவடை செய்ய மீடியாக்களும், மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் தீவிரமாக உள்ளன.
இதன் காரணமாகவே வைபவ் சூர்யவன்ஷியின் அறிமுகம் பல்வேறு தரப்பினராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. முதல் டி20 போட்டியில் அயர்லாந்திடம் இந்திய அணி அதிர்ச்சித் தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து, இன்று நடைபெறும் இரண்டாவது மற்றும் இறுதி டி20 போட்டி வாழ்வா-சாவா ஆட்டமாக மாறியுள்ளது.
முதல் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷிக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. தொடரைத் தீர்மானிக்கும் இந்த முக்கிய ஆட்டத்திற்கான விளம்பரங்களில் வைபவ் முன்னிலைப்படுத்தப்பட்டு வருவதால், இன்றைய ஆட்டத்தில் அவர் நிச்சயம் ஆடும் லெவனில் களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உச்சத்தைத் தொட்டுள்ளது.
இடதுகை அதிரடி பேட்ஸ்மேனான வைபவ் சூர்யவன்ஷி இன்றைய போட்டியில் களமிறங்கினால், சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடிய மிகக் குறைந்த வயதுடைய வீரர் என்ற மாபெரும் வரலாற்றுச் சாதனையைத் தன்வசப்படுத்துவார். ஆனால் வைபவ் சூர்யவன்ஷிக்கு பதிலாக யார் வெளியில் அமர வைக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.