அறை எண் 13-ல் சவக் கலை | உளவன் 09 | ulavan-a-new-series-on-second-world-war-spy-world-part-Nine

Spread the love

மூடநம்பிக்கையை தகர்க்கும் விதமாக மூளை பலம் கொண்ட உளவுத்துறை அதிகாரிகள் இந்த அறைக்கு அந்த எண்ணை வழங்கினார்களா? ஒருவேளை எதிரியை உளவறிய கொஞ்சம் மூடநம்பிக்கையும் அவசியம் என்பதால் 13-ம் எண்ணைச் சேர்த்துக் கொண்டார்களா? கொஞ்சம் உண்மையும் நிறைய பொய்யும் கலந்த தகவலே எதிரியை திசை திருப்பும். அந்த வேலைக்குப் பொருத்தமான எண் 13 என கருதினார்களோ என்னவோ…

எனிக்மா எந்திரங்களை ஒட்டுக் கேட்டு தகவல்களை சேகரிப்பது, பிரிட்டன் உளவுத்துறை குறியீட்டு உடைப்பு அணியின் வேலை. அந்தத் தகவல்களை ஒருங்கிணைத்து குறிப்புகளாக்கி அரசு தலைமைக்கு அனுப்புவது Section 17M-ன் வேலை. எனிக்மா எந்திர தகவல்களில் நிபுணத்துவம் பெற்றவர் ஈவன் மாண்டேகு. தினந்தோறும் இருநூறுக்கும் மேற்பட்ட தகவல்களை அவர் கையாண்டார். அதாவது, ஜெர்மன் உளவுத்துறை வலைப் பின்னல்களின் முடிச்சுகளை அவர் எளிதாக அவிழ்த்துவிடுவார்.

“காதல் கடிதம் எழுதிய அனுபவம் இருக்கா…?” அங்கிருந்த பெண் செயலாளர்களிடம் கேட்டார் மாண்டேகு. திடீரென பாஸ் கேட்கவும் அவர்கள் சிரித்துக் கொண்டே ஆமாம் என்றனர்.

“ஓகே… எனக்கு ஒரு கடிதம் எழுதித் தர வேண்டும்.” 40 வயதானாலும் இளமை ததும்பும் உடல்கட்டு அவருக்கு. அதனால் பெண் பணியாளர்களில் சிலர் அதிர்ந்தனர். சிலரோ கூச்சத்தில் நெளிந்தனர்.

“எனக்கில்லை. நண்பருக்கு. ஆனால், நண்பர் விரைவில் செத்து விடுவார்…” சோகமாக முகத்தை வைத்துக் கொண்டார் மாண்டேகு.

அந்தப் பெண்களுக்கு ஆச்சரியம். இறக்கப் போகிறவருக்கு காதல் கடிதமா? எழுதித் தொலைவோம், உயரதிகாரி கேட்கிறார். சாவை எதிர்நோக்கி இருப்பவரின் அங்க அடையாளங்களைக் கேட்டனர். தெரியாது என உதட்டைப் பிதுக்கியவர், “அவர் மிலிட்டரி மேன் என்ற தகவல் மட்டும்தான் தெரியும். நானே அவரை இதுவரை பார்த்ததில்லை” என்றார்.

இரண்டு பெண்கள் எழுதிய காதல் கடிதங்களில், கவித்துவமாகவும் காதல் ரசம் சொட்டுவதாகவும் இருந்த ஒரு கடிதத்தை மாண்டேகு எடுத்துக் கொண்டார். 

“ஓர் அழகான பெண்ணின் புகைப்படம் வேண்டுமே… லெஸ்லி உங்களோட நல்ல ஃபோட்டோ ஏதாவது இருக்கா?” 

அங்கிருந்த அனைத்து ஊழியர்களும் குழப்பத்தில் உறைந்தனர். காதல் கடிதம், அழகான பெண்ணின் புகைப்படம். பாஸ் என்ன செய்யப் போகிறார்? எல்லோரும் இப்படி சிந்திக்க, இளம்பெண் லெஸ்லி பயந்தே போய்விட்டார்.

“பயப்படாதே லெஸ்லி. வெறுமனே கடிதம் மட்டும் போதாதுல்ல. காதல் கடிதத்தோட காதலியின் ஃபோட்டோவும் இருந்தால் எப்படி இருக்கும்? செத்தவன் ஓர் உணர்வுப் பூர்வமான மனிதன் என நம்பிக்கை வரும்ல…” மாண்டேகு புதிர் மேல் புதிர் போட அந்த அறையில் இருந்தவர்கள் முழித்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *